வாஷிங்டன்,அதானி குழுமத்தின் மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவதாக அதன் நிறுவனர் நேட் ஆண்டர்சன் அறிவித்துள்ளார். இதுகுறித்து நேட் ஆண்டர்சன் வெளியிட்டுள்ள பதிவில், “ஹிண்டன்பர்க் நிறுவனத்தை மூடுவதற்கான காரணம் எதுவுமில்லை. மிரட்டல், உடல்நலப் பாதிப்புகள் போன்ற எதுவுமில்லை. கடந்த ஆண்டு குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எங்கள் குழுவுடன் விவாதித்து இந்த முடிவை எடுத்துள்ளேன். இதனால், ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தை நிரந்தரமாக மூட முடிவுசெய்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
2023 ஆண்டில் அதானி குழுமத்திற்கு எதிரான அதன் அறிக்கையில் அந்நிறுவனம் பல பில்லியன் டாலர் இழப்பை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிரபல முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனம் ஹிண்டன்பர்க். இந்த நிறுவனம் உலகின் பெரும் நிறுவனங்களில் நடைபெறும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கைகளை வெளியிடுவது வழக்கம். இதன் அறிக்கைகள், மோசடிகளை அம்பலப்படுத்துவதிலும், முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்கு வகிப்பதாக நம்பப்படுகிறது.









