மகா கும்பமேளா நிகழ்ச்சிக்கு பசும்பாலை நேர்த்திக்கடனாக வழங்கும் பாகிஸ்தான் பெண்

லக்னோ,பாகிஸ்தான் மாநிலம் சிந்து மாகாணம் ஜகோபாபாத் நகரை சேர்ந்த பெண் சீமா ஹைதர் (வயது 32). இவருக்கு திருமணமாகி குலாம் ஹைதர் என்ற கணவரும், 4 குழந்தைகளும் இருந்தனர். இதனிடையே, பப்ஜி விளையாட்டு மூலம் சீமா ஹைதருக்கு உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த சச்சின் மீனா (வயது 25) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இதையடுத்து, சீமா தனது 4 குழந்தைகளுடன் பாகிஸ்தானில் இருந்து நேபாளம் சென்றார். சச்சினும் நேபாளம் சென்றுள்ளார். இருவரும் அங்கு திருமணம் செய்துள்ளனர். பின்னர், நேபாளம் வழியாக கடந்த 2023ம் ஆண்டு சீமா மற்றும் அவரது 4 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு சச்சின் சட்டவிரோதமாக இந்தியா வந்தார்.

பின்னர், சச்சினும் சீமாவும் 4 குழந்தைகளுடன் கிரேட்டர் நொய்டாவில் வாடகை வீட்டில் வசித்துள்ளனர். இந்த விவகாரம் அதிகாரிகளுக்கு தெரியவந்த நிலையில் சீமா மற்றும் அவரது 4 குழந்தைகளையும் போலீசார் கைது செய்தனர். பின்னர், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

அதேவேளை, தான் பாகிஸ்தானுக்கு செல்ல விரும்பவில்லை என்றும், சச்சினை திருமணம் செய்துகொண்டு இந்து மதத்திற்கு மாறிவிட்டதாகவும் கூறினார். இதையடுத்து, சீமா தனது 4 குழந்தைகளுடன் கணவர் சச்சினுடன் வாழ்ந்து வருகிறார். தற்போது சீமா கர்ப்பிணியாக உள்ளார்.இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சிக்கு 51 லிட்டர் பசும்பாலை சீமா ஹைதர் நேர்த்திக்கடனாக வழங்க உள்ளார். சீமா ஹைதரும் அவரது கணவர் சச்சினும் மகா கும்பமேளா நிகழ்ச்சிக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால், கர்ப்பமாக இருப்பதால் மகா கும்பமேளா நிகழ்ச்சிக்கு சீமாவால் செல்ல முடியவில்லை. ஆனாலும், மகா கும்பமேளா நிகழ்ச்சிக்கு 51 லிட்டர் பசும்பாலை நேர்த்திக்கடனாக வழங்க உள்ளோம் என்று சீமாவும் அவரது கணவர் சச்சினும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here