சுங்கை கோலோக் தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளத்தை மறைக்க நிகாப் அணிந்திருந்தனர்; துணை மேயர்

தாய்லாந்தில் உள்ள சுங்கை கோலோக் மாவட்ட அலுவலகத்தை நேற்று தாக்கிய குழு, அடையாளம் தெரியாமல் இருக்க நிகாப் அணிந்திருந்ததாக சுங்கை கோலோக் துணை மேயர் அஃபிசெட் ஜெ-ஓமா கூறுகிறார். சிசிடிவி காட்சிகள் வழி இது தெரிய வந்துள்ளதாகவும் 10க்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய தாக்குதல்காரர்கள் ஒரு பிக்கப் டிரக், காரில் வருவதைக் காட்டியதாகவும் அவர் கூறியதாக பெரித்தா ஹரியான் தெரிவித்தார். அலுவலகத்திற்கு வெளியே இரண்டு தன்னார்வ பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டிருந்த பாதுகாப்புச் சாவடியை நோக்கி பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தினர். அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்றவர் சுங்கை கோலோக் மருத்துவமனையில் இறந்தது உறுதி செய்யப்பட்டது.

பின்னர் அவர்கள் காரை அலுவலகத்திற்குள் செலுத்தி, பின்னர் பிக்கப் டிரக்கில் அப்பகுதியை விட்டு வெளியேறினர். சிறிது நேரத்திலேயே, கட்டிடத்தில் ஒரு வெடிப்பு நிகழ்ந்து 12 பேர் காயமடைந்தனர்  என்று அஃபிசெட் கூறினார். சுங்கை கோலோக் மாவட்ட அலுவலகத்தில் உள்ள பாதுகாப்புக் கட்டுப்பாட்டுச் சாவடியில் இரவு 7.10 மணிக்கு நடந்த தாக்குதலில் எட்டு பேர் காயமடைந்ததாகவும்  இரண்டு தாய்லாந்து பாதுகாப்புப் பணியாளர்கள் கொல்லப்பட்டதாகவும் நேற்று தெரிவிக்கப்பட்டது.

உயிரிழந்த  இருவர் சப்ரி நாசவன், டோட்சபோன் பைபிம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.  மலேசியர்களிடையே பிரபலமான ஷாப்பிங் சென்டரான பிக் சி அருகே இந்தத் தாக்குதல் நடந்ததாக சுங்கை கோலோக் காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். தாய்லாந்தின் தெற்கு எல்லைக்கு அருகில் அமைந்துள்ள நகரத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதே இந்தத் தாக்குதலின் நோக்கம் என்று அஃபிசெட் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here