கம்போங் பாரு பூச்சோங்கில் உள்ள ஒரு வீட்டில் கடந்த வியாழக்கிழமை,முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக, போலீசார் ஆறு பேரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
சுபாங் ஜெயா காவல்துறைத் தலைவர் வான் அஸ்லான் வான் மாமட், தாக்குதலுக்கான நோக்கம் மற்றும் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் ஆகியவற்றைக் கண்டுபிடித்து வருவதாகக் கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
தலை மற்றும் கழுத்தில் ஏற்பட்ட ‘பல கூர்மையான காயங்கள்’ தான் மரணத்திற்கான காரணம் என்று பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. விசாரணையில் பாதிக்கப்பட்டவரின் மொபைல் போன் காணாமல் போனது கண்டறியப்பட்டது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமை, கம்போங் பாரு பஸ் பூச்சோங்கில் உள்ள ஒரு வீட்டில், தலை, காதுகள் மற்றும் உடலின் பின்புறத்தில் காயங்களுடன் 70 வயது மதிக்கத்தக்க ஒரு ஆடவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவரின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதை குடியிருப்பாளர் ஒருவர் கண்டறிந்ததை அடுத்து இது நடந்தது. இந்த வழக்கு குறித்த தகவல் தெரிந்த பொதுமக்கள், விசாரணை அதிகாரி ஆர்.ராய் எரிந்திர ராஜை 019-6616640 என்ற எண்ணில் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.









