கோலாலம்பூர்,
எதிர்காலத்தில் நடைமுறைக்கு வரும் இடைநிலைப் பள்ளி கட்டாயக் கொள்கையை பெற்றோர் பின்பற்றத் தவறினால், கல்வி அமைச்சு சட்ட நடவடிக்கையை கடைசி இறுதித் தீர்வாக எடுக்கும் என கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.
1996 கல்விச் சட்டம் (சட்டம் 550) திருத்தம் மூலம் இந்தக் கொள்கை ஜூன் மாதம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும். அத்துடன், மடானி அரசு வழங்கும் அனைத்து உதவிகளும் மாணவர்களுக்கு சரியாகக் கிடைக்க வேண்டும் என்பதை கல்வி அமைச்சு உறுதி செய்யும்.
தொடக்கப்பள்ளி கல்விக் கட்டாயக் கொள்கையைச் செயல்படுத்திய அனுபவத்திலிருந்து நாம் பாடம் கற்றிருக்கிறோம். கல்விக்கான சட்டம் இருந்தாலும் இதுவரை எந்த ஒரு பெற்றோரும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவில்லை. முதலில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதே முக்கியம். ஆனால், எல்லா முயற்சிகளும் தோல்வியடைந்தால் மட்டுமே சட்ட நடவடிக்கையை எடுப்போம் என்று பிம்பிங்கன் ஜாலினான் காசே பள்ளி மாணவர்களுடன் நோன்பு திறத்தல் மேற்கொள்வதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.

‘ஸியாரா சக்னா’ (Ziarah Cakna) திட்டத்தின் கீழ், பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளின் வீடுகளுக்குச் சென்று பெற்றோரைச் சந்தித்த அனுபவத்தில், இன்னும் சில பெற்றோர் குழந்தைகளின் கல்வியின் முக்கியத்துவத்தை முழுமையாக உணரவில்லை என்று அவர் கூறினார்.
இந்த புதியக் கல்விக் கொள்கையின் மூலம், இடைநிலைப் பள்ளியில் மாணவர் பதிவு 94.86 விழுக்காடு என்ற நிலையிலிருந்து மேலும் உயர்த்த கல்வி அமைச்சு செயல்படுகிறது.
கல்வி அமைச்சின் தலைமைச் செயலாளர் அஸ்மான் அட்னான் விளக்குகையில், புதிய கல்வி திருத்தச் சட்ட மசோதாவின்படி கட்டாய கல்வி விதிகளை மீறினால், பெற்றோர் அதிகப்பட்சம் 5,000 ரிங்கிட் அபராதம் செலுத்தவேண்டும். அல்லது 6 மாதம் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சந்திக்க வேண்டியிருக்கும் எனக் கூறினார்.
ஆனால், இது கடைசிக்கட்ட நடவடிக்கையாகவே அமையும். அதற்கு முன்னதாக மாணவர்கள் பள்ளிக்கு வராததற்கான முக்கிய காரணங்களை கல்வி அமைச்சு முதலில் ஆய்வு செய்யும் எனவும் அவர் தெரிவித்தார். செய்தியாளர்களுடன் நடத்தப்பட்ட இதன் விளக்கக்கூட்டத்தில் கல்வி துணை அமைச்சர் ஓங் கா வோ, அமைச்சின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.









