கோலாலம்பூர்: 360 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள தவறான விவரங்களைக் கொண்ட உரிமைகோரல்களைச் சமர்ப்பித்ததாகக் கூறப்படும் ஒரு நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி திங்கள்கிழமை வரை மூன்று நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இன்று புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து இந்த தடுப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஒரு வட்டாரத்தின்படி, 40 வயதுடைய சந்தேக நபர் நேற்று இரவு 11 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள MACC தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்கச் சென்றபோது கைது செய்யப்பட்டார். முதல் விசாரணையில், சந்தேக நபர் 1.3 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நெடுஞ்சாலை கட்டுமானத் திட்டத்தில் சுகுக் நிதியைப் பயன்படுத்தி சுமார் 360 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள உரிமைகோரல்களைச் செய்ய தவறான விவரங்கள் கொண்ட ஆவணங்களைச் சமர்ப்பிப்பதில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
MACC விசாரணைப் பிரிவின் மூத்த இயக்குனர் ஜைனுல் தருஸ் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார். மேலும் தவறான உரிமைகோரல்களை வழங்குவதன் மூலம் ஏமாற்ற நினைத்த குற்றத்துடன் தொடர்புடைய MACC சட்டம் 2009இன் பிரிவு 18 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுவதாகக் கூறினார். கடந்த புதன்கிழமை இதே வழக்கு தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த “டத்தோஸ்ரீ” பட்டத்தை கொண்ட ஒருவர் உட்பட மூன்று ஆடவர்கள், ஒரு பெண் உட்பட நான்கு நபர்கள் எம்ஏசிசி ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக ஜைனுல் கூறினார்.