கலைப் பொக்கிஷத்துடன் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் ஸ்ரீ அஷ்ட தச புஜ காளியம்மன் ஆலயம்

தன்னைத் தேடி வரும் பக்தர்களின் இன்னல்களைப் போக்கும் கண் கண்ட தெய்வமாகவும், காவல் தெய்வமாகவும், ஆயேர் சிமாகோக் டுரியான் துங்கால் எனும் சிற்றூரில் அருள் பாலித்து வருகிறாள் ஸ்ரீ அஷ்டதச புஜ காளியம்மன்.

சரஸ்வதி, லட்சுமி, துர்கா என மூன்று அம்சங்களை கொண்ட பேசும் தெய்வமாகவும், கேட்டதெல்லாம் கொடுக்கும் காமதேனுவாகவும் அம்பாள் இங்கு அருளாசி வழங்குகிறாள்.

“அம்மா” என அன்புடன் அழைப்பவர்களை தன்னுள் அரவணைத்துக் காக்கும் இவ்வம்மனுக்கு, ஆலய மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 8 ஜூன் 2025, ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை விமரிசையாக நடைபெறவுள்ளது.

ஆலய ஸ்தாபகர் அருள்வாக்கு சித்தர் சிவஸ்ரீ சண்முகநாதன் சுவாமிகளின் அயராத முயற்சியாலும், ஆலயத் தலைவர் ஜெகனின் அரவணைப்பாலும், பக்தர்கள் மற்றும் கொடை நெஞ்சங்களின் ஒத்துழைப்பாலும் இவ்வாலயம் வரலாற்று மாநிலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் கட்டப்பட்டது.

கண்ணைப் பறிக்கும் அழகிய வேலைப்பாடுகளுடன், பிரமாண்டமான வடிவில் இவ்வாலயம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 7 ஆண்டுகளுக்கு முன் இந்த திருப்பணி வேலைகள் தொடங்கி, சிறுகச் சிறுக அனைத்து கட்டுமான பணிகளும் முடிவடைந்து, விரைவில் மகா கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கிறது.

எங்கும் இல்லாத வகையில், அம்பாளின் இராஜகோபுரத்தில் 7 கலசங்கள் வைக்கப்பட்டுள்ளன. அம்பாள் இராஜ அம்சம் கொண்டவள் என்பதை சித்தரிக்கும் விதமாக, இக்கலசங்கள் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாலய இராஜகோபுரம் 7 நிலைகளில், மற்றும் அம்பாளின் கோபுரம் 5 நிலைகளில் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள அனைத்து சிற்ப வேலைப்பாடுகளும் ஆகம முறைப்படி அமைக்கப்பட்டுள்ளன. சிறு சிறு நுணுக்கமான சிற்பங்கள், மிக உன்னிப்புடனும் கவனத்துடனும் செதுக்கப்பட்டுள்ளன.

கர்ப்பகிரகம், கருவறை, அர்த்தமண்டபம், அர்த்த அர்த்த மண்டபம் என மூன்று நிலைகளில் அமைக்கப்பட்டுள்ளமை, இவ்வாலயத்தின் தனிச்சிறப்பாகும்.

இங்குள்ள ஒவ்வொரு சிலைகளும் மிக உயரமாகவும், கலை நயத்துடனும் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு தூணிலும் நுட்பமான சிற்பக்கலை காணப்படுகிறது.

கோவிலில் நுழைந்ததும், மேற்பகுதியில் தாமிர தகடுகளில் அமைக்கப்பட்ட அழகிய கவசம் கண்களை கவர்கிறது. துவார பாலகிகள் நரசிம்ம அவதாரத்தில் காட்சி தருகின்றனர்.

உற்சவ மூர்த்தியாக கருவறையில் ஸ்ரீ அஷ்டதச புஜ காளியம்மன் வீற்றிருக்கிறார். ஆலயத்தை காக்கும் காவல் தெய்வமாக, கருப்பண்ணசாமி — கறுத்த உடலும், முறுக்கு மீசையும், மிகப் பெரிய கண்களும், வீச்சு அரிவாளும் ஏந்தி, 27 அடி உயரத்தில் ஆலய நுழைவாயிலில் கம்பீரமாக நிற்கிறார்.

உள் பிரகாரத்தில் மிகப் பெரிய வடிவில் கருங்கல்லில் சாமுண்டா காளி நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். முனீஸ்வரன், பத்திரகாளி உள்ளிட்ட சிலைகள் பிரமாண்டமாக நிறுவப்பட்டுள்ளன.

ஆலயத்தில் கால் பதித்தவுடன், அங்கு பதிக்கப்பட்டுள்ள பளிங்கு கற்கள் ஆன்மீக அதிர்வலைகளை தூண்டி, மனதிற்கு இதயத்திற்குச் சிறந்த அமைதியையும் தருகின்றன.

புதிய ஆலயத்தில் மஹாலட்சுமி கருங்கல் சிலை நிறுவப்பட்டுள்ளது. பரிவார தெய்வங்களாக விநாயகர், முருகன் ஆகியோருடன், ஆலயச் சுவரை சுற்றி காளியம்மனின் 8 அவதாரங்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பிரமாண்டமான ஆலயம் — அம்பாள் அவளுக்கே வேண்டியதை, அவளே அமைத்துக் கொண்டாள் என்பதே நிதர்சனம்.

“நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக” எழுந்தருளும் இவ்வாலயம், தொடர்ந்து ஒரு சமுதாய சேவை மையமாக திகழும் என்பது, அம்மாவின் கனவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here