ரூ. 20 லட்சம் மதிப்புள்ள நகைகள் இருந்த பையை பறித்துச்சென்ற குரங்கு

லக்னோ,உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தை சேர்ந்தவர் அபிஷேக் அகர்வால். இவர் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் மதுராவில் உள்ள தாகூர் பாங்கி பீகாரி கோவிலுக்கு நேற்று சென்றுள்ளார். கோவிலுக்கு செல்லும்போது அபிஷேக்கின் மனைவி தான் அணிந்திருந்த நகைகளை கழற்றி கைப்பையில் வைத்துள்ளார்.அந்த பையில் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளை அவர் வைத்திருந்தார்.

இந்நிலையில், கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது திடீரென அங்கு கூடியிருந்த குரங்குகளில் ஒன்று அபிஷேக்கின் மனைவி வைத்திருந்த நகைப்பையை பறித்துச்சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குரங்கு பறித்துச்சென்ற நகைப்பையை தேடினர். மேலும்,இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் பல மணிநேர தேடுதலுக்குப்பின் முட்புதரில் இருந்து நகைப்பையை மீட்டனர். அதில் அபிஷேக்கின் மனைவி நகைகள் அனைத்தும் இருந்தன. இதையடுத்து, மீட்கப்பட்ட நகைகள் அபிஷேக் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here