தற்கொலை தாக்குதலில் 16 வீரர்கள் பலி.. இந்தியாவை குற்றம்சாட்டிய பாகிஸ்தான் – பொறுப்பேற்ற தாலிபான்

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள வட வசிரிஸ்தான் மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரு தற்கொலைப்படைத் தாக்குதல் நடந்தது.

வெடிபொருள் நிரப்பப்பட்ட வாகனம் ராணுவ கான்வாய் மீது மோதியதில் 16 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர் மற்றும் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உட்பட பலர் காயமடைந்தனர். இரண்டு வீடுகளின் கூரைகளும் இடிந்து விழுந்ததில் ஆறு குழந்தைகள் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபானின் ஒரு பிரிவான ஹபீஸ் குல் பகதூர் ஆயுதக் குழுவின் தற்கொலைப்படைப் பிரிவு பொறுப்பேற்றுள்ளதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு இந்தியா ஆதரவளித்த பயங்கரவாதிகள்தான் காரணம் என்று பாகிஸ்தான் ராணுவம் குற்றஞ்சாட்டியது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை இந்தியா கடுமையாக நிராகரித்துள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால், பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டு அவமதிப்பிற்குரியது என்று கூறி நிராகரித்தார்.

2021-ல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லையோரப் பகுதிகளில் வன்முறை அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் ஆகிய இரு மாகாணங்களிலும் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும் ஆயுதக் குழுக்களால் சுமார் 290 பேர், பெரும்பாலும் பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here