‘த.வெ.க. அரசு கொடுத்த சுதந்திரம்… இதனால்தான் விஜய் முதல்-அமைச்சர் ஆனார்’ – அமைச்சர் ஷாஜகான் நெகிழ்ச்சி

சென்னை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐ.யூ.எம்.எல்.) கட்சியின் பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ.வும், தமிழக அரசின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான ஷாஜகான், சென்னையில் இன்று நடைபெற்ற மிலாதுன் நபி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;-

“2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்களித்தனர். அதனால்தான் த.வெ.க. தலைவர் விஜய், இன்று முதல்-அமைச்சராக பதவியில் அமர்ந்துள்ளார். ஐ.யூ.எம்.எல். கட்சி வேறு அணியில் போட்டியிட்டிருந்தாலும், காலத்தின் சூழ்நிலை கருதி, த.வெ.க. அமைச்சரவையில் பங்கேற்றோம். இன்று உங்களில் ஒருவனாக, சமுதாயத்தின் பிரதிநிதியாக, அமைச்சர் என்ற உயர்ந்த பொறுப்பை எல்லாம் வல்ல இறைவன் எனக்கு வழங்கியுள்ளார்.

கடந்த 3 மாத காலமாக முதல்-அமைச்சரிடமும், பல்வேறு மூத்த அமைச்சர்களிடமும் சமுதாயத்தின் நலன் நாடி பல கட்டங்களாக பேசியுள்ளோம். தற்போது நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டபோது, முதல்-அமைச்சர் விஜய்யும், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும், ‘சமுதாயத்தின் பிரதிநிதியாக உங்களை தேர்ந்தெடுத்துள்ளோம். சமுதாயத்திற்கு வேண்டியதை நீங்களே முடிவு செய்யுங்கள்’ என்று சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக நமக்கு த.வெ.க. அரசு இத்தகைய சுதந்திரத்தைக் கொடுத்துள்ளது.

பட்ஜெட் உரையில் தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், இதுவரை இல்லாத அளவிற்கு ஹஜ் பயணத்திற்கான மானியம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். முஸ்லிம் உதவும் சங்கங்களை மீண்டும் அதிக அளவில் தொடங்குவதற்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்லறை தோட்டங்களை பராமரிப்பதற்கு, சுற்றுச்சுவர் கட்டுவதற்கு, சாலை வசதிகள் ஏற்படுத்துவதற்கு ரூ.34 கோடி ரூபாயை இந்த அரசு வழங்கியிருக்கிறது.

அதோடு, நமது மகத்தான தலைவர் கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் பெயரால் திருவள்ளுவர் தினத்தன்று தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கப்படும் என்ற மகத்தான அறிவிப்பை இந்த அரசு வெளியிட்டுள்ளது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here