சிறுமியை பலாத்காரம் செய்து, கொல்ல முயற்சி; வாலிபருக்கு விசித்திர தண்டனை

அன்டனநாரிவோ,இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்த தீவு நாடான மடகாஸ்கரில் தலைநகர் அன்டனநாரிவோவில் இருந்து 30 கி.மீ. மேற்கே ஐமெரீன்ட்சியாடோசிகா என்ற நகரம் உள்ளது. இந்த நகரில் வசித்து வரும் 6 வயது சிறுமியை நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து, கொல்ல முயற்சி செய்துள்ளார்.

இதுபற்றிய வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு பற்றி கோர்ட்டின் அரசு வழக்கறிஞர் தீதியர் ரசா பிந்த்ராலம்போ செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு, கடுமையாக உழைக்க வேண்டும் என்ற தண்டனையுடன் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது என்றார்.

அவர் தொடர்ந்து, அதனுடன், ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது என கூறியுள்ளார். இதனை ஊடகத்திற்கு, அந்நாட்டின் நீதி துறை வீடியோவாக தகவல் வெளியிட்டு உள்ளது.

10 மற்றும் அதற்கு குறைவான சிறுமிகளின் பலாத்கார வழக்குகளில் இதுபோன்ற கடுமையான தண்டனையை வழங்க, கடந்த 2024-ம் ஆண்டில் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தண்டனை அந்நாட்டில் முதன்முறையாக அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நோக்கங்களுடனான நபர்களுக்கான எச்சரிக்கையாக இது அமையும் என்று வழக்கறிஞர் கூறினார்.

செக் குடியரசு, ஜெர்மனி நாடுகளில் பாதிக்கப்பட்டோரின் ஒப்புதலுடன், பாலியல் குற்றவாளிகளுக்கு இதுபோன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. அமெரிக்காவின் லூசியானாவில் கடந்த ஆண்டு இந்த நடைமுறை கட்டாயம் ஆக்கப்பட்டது.

போலந்து மற்றும் தென்கொரியா நாடுகளிலும் இந்த தண்டனை காணப்படுகிறது. இங்கிலாந்து இதுபற்றிய பரிசீலனையில் உள்ளது. எனினும், மனித உரிமை அமைப்புகள் இந்த தண்டனை நெறிமுறையற்றது என வாதிட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here