கோலாலம்பூர்: திங்கட்கிழமை காஜாங்கில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் 14 வயது மாணவன் ஒருவன் தனது ஆசிரியரை அடித்து மிரட்டியதாகக் கூறப்படும் நிலையில், காவல்துறையினரால் அம்மாணவன் கைது செய்யப்பட்டான்.
29 வயது ஆசிரியர் ஒருவர் உடற்கல்வி வகுப்பைத் தவறவிட்டதற்காகக் கண்டித்ததால், மாணவர் கோபமடைந்ததை அடுத்து இந்தச் சம்பவம் நடந்ததாக காஜாங் காவல்துறைத் தலைவர் நாஸ்ரோன் யூசோஃப் தெரிவித்தார். சந்தேக நபருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் மாணவர் ஆசிரியரின் முகத்தில் அடித்து மிரட்டினார்.
இந்தச் சம்பவத்தை வேறு பல ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நேரில் கண்டனர். திங்கட்கிழமை இரவு 7.15 மணியளவில் ஆசிரியர் காவல் துறையில் புகார் அளித்தார். பின்னர் சந்தேக நபர் காஜாங் பகுதியில் கைது செய்யப்பட்டார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இன்று ஜூலை 30 ஆம் தேதி காஜாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வேண்டுமென்றே காயப்படுத்தியதற்காக மாணவர் மீது குற்றஞ்சாட்டப்படும் என்று நாஸ்ரோன் கூறினார். இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் மாணவர் ஆசிரியரை அடிப்பதைக் காட்டுகிறது.








