ஜூனியர் என்.டி.ஆருக்கு தோள்பட்டை அறுவை சிகிச்சை.. மருத்துவமனையில் அனுமதி …

ஐதராபாத், படப்பிடிப்பில் காயமான ஜூனியர் என்.டி.ஆருக்கு இன்று ஐதராபாத்தில் உள்ள கிம்ஸ் (KIMS) மருத்துவமனையில் தோள்பட்டை அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். தற்போது ‘கே.ஜி.எஃப்’ புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டிராகன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். பிரசாந்த் நீல் – ஜூனியர் என்.டி.ஆர் கூட்டணியில் உருவாகி வரும் இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பில் காயம்

‘டிராகன்’ படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது ஜூனியர் என்.டி.ஆருக்கு எதிர்பாராத விதமாக தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவர்கள் அவரை பரிசோதித்த நிலையில், காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய 6 முதல் 8 வாரங்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியதாக அவரது குழுவினர் தெரிவித்திருந்தனர். மேலும், ரசிகர்கள் கவலைப்பட தேவையில்லை என்றும் கூறியிருந்தனர்.

இன்று அறுவை சிகிச்சை

இந்த நிலையில், ஜூனியர் என்.டி.ஆருக்கு இன்று ஐதராபாத்தில் உள்ள கிம்ஸ் (KIMS) மருத்துவமனையில் தோள்பட்டை அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. அவரது தோள்பட்டை காயம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளின் அடிப்படையில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களுக்கு குழுவினர் தகவல்

ஜூனியர் என்.டி.ஆர் விரைவில் குணமடைவதை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மருத்துவக் குழுவினர் மேற்கொண்டு வருவதாகவும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் தொடர்ந்து தெரிவிக்கப்படும் என்றும், ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் புரிதலுக்கும் தொடர்ச்சியான ஆதரவுக்கும் நன்றி என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூனியர் என்.டி.ஆரின் உடல்நிலை குறித்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here