தீபாவளி என்றாலே மகிழ்ச்சி, குதூலகம், கொண்டாட்டம்தான். நாம் மகிழ்ச்சியாக தீபத்திருநாளை வரவேற்கும் வேளை நமக்கு மிகவும் நெருக்கமானவர்களும் நண்பர்களும் அவர்கள் குடும்பத்தாருடன் தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று நினைப்பதுதானே இயல்பு. இந்த எண்ணம் எத்தனை பேருக்கு வரும் என்று தெரியவில்லை.
உதவி வழங்க வேண்டும் என்ற மனிதாபிமானம் மனம் கொண்ட மைடின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ வீரா டாக்டர் ஹாஜி அமீர் அலி மைடினும் அவரின் துணைவியாரும் நாடறிந்த கலைஞரும் நகைச்சுவை நடிகரான சத்யாவின் இல்லத்திற்கே சென்று தீபாவளிக்கான அன்பளிப்பினை வழங்கி அவரின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.
நீரிழிவு நோய் காரணமாக அண்மையில் இடது காலை இழந்த சத்யாவிற்கு சக்கர நாற்காலி, பணமுடிப்பு, உணவுப் பொருட்களை வழங்கினார். இதை தவிர்த்து மைடினின் உதவித்திட்டத்தின் வழி மாதத்திற்கு 300 ரிங்கிட் என 12 மாதங்களுக்கு (1 வருடத்திற்கு) 3,600 ரிங்கிட்டிற்கான பற்றுச்சீட்டினையும் வழங்கினார். மேலும் சாரா திட்டத்தின் கீழ் பெறப்பட்ட 100 ரிங்கிட் உதவிப் பொருட்களும் வழங்கப்பட்டது.
நடிகர் சத்யாவிற்கு உதவிப் பொருட்களை வழங்கிய பிறகு பேசிய டத்தோ வீரா டாக்டர் ஹாஜி அமீர் அலி மைடின் நாம் எல்லாம் நடிகர்கள் என்றால் வசதிப் படைத்தவர்கள் என்று நினைக்கிறோம். ஆனால் சத்யாவை போன்றோர் பலர் இருக்கின்றனர். நமக்கு தெரிந்தவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த உதவிகள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
மைடினின் அழைப்பினை ஏற்று இந்த தீபாவளி அன்பளிப்பிற்கு வருகைத் தந்த மக்கள் ஒசையின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ கோபால கிருஷ்ணன் சண்முகமணிக்கு நன்றியையும் தீபாவளியை கொண்டாடவிருக்கும் அனைவருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துகளையுன் தெரிவித்துக் கொண்டனர்.













