மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று சவூதி அரேபியாவுக்கு அரசு முறைப் பயணமாகப் புறப்பட்டார். நவம்பர் 6 ஆம் தேதி, அவர் அரசு முறைப் பயணமாக பஹ்ரைனுக்கும் செல்ல உள்ளார் என்று பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது. 1984 ஆம் ஆண்டு மறைந்த சுல்தான் அகமது ஷாவின் வருகைக்குப் பிறகு மலேசிய மன்னர் ஒருவர் சவூதி அரேபியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வது இது முதல் முறையாகும். சுல்தான் இப்ராஹிமை ஏற்றிச் சென்ற சிறப்பு விமானம் காலை 9 மணிக்கு சுபாங்கில் உள்ள ராயல் மலேசிய விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்டது. துணைப் பிரதமர் ஃபடில்லா யூசோப் பிரியாவிடை அளிக்க உடனிருந்தார்.
வெளியுறவு அமைச்சர் முகமது ஹசான், தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில், உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில், சமய விவகார அமைச்சர் நயிம் மொக்தார், சுகாதார அமைச்சர் ஸுல்கிஃப்ளி அகமது, சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் தியோங் கிங் சிங் ஆகியோரும் அங்கிருந்தனர். அரசு தலைமைச் செயலர் ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர், மக்களவை சபாநாயகர் ஜோஹாரி அப்துல், சட்டத்துறைத் தலைவர் டுசுகி மொக்தார், ஆயுதப் படைத் தலைவர் ஜெனரல் நிஜாம் ஜாஃபர், பொதுப்பணித் துறை இயக்குநர் ஜெனரல் வான் அகமது தஹ்லான் அப்துல் அஜீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ரியாத்தில் இருக்கும் போது, அல்-யமாமா அரண்மனையில் சவூதி பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது சல்மானுடன் சுல்தான் இப்ராஹிம் சந்திப்பு நடத்த உள்ளார்.
சவூதி அரேபியாவின் பயணத்தின் முடிவில், சுல்தான் இப்ராஹிம் மன்னர் ஹமத் இசா அல்-கலீஃபாவின் அழைப்பின் பேரில் பஹ்ரைனுக்குப் புறப்படுவார். இது 1974 இல் மலேசியாவிற்கும் பஹ்ரைனுக்கும் இடையே இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதிலிருந்து முதல் அரசுப் பயணத்தைக் குறிக்கிறது. சுல்தான் இப்ராஹிமும் மன்னர் ஹமத்தும் நீண்டகால நட்பைப் பகிர்ந்து கொள்கிறார்கள். ஜோகூர் சுல்தானாக சுல்தான் இப்ராஹிம் 2017 இல் பஹ்ரைனுக்கு விஜயம் செய்தார். அதே நேரத்தில் மன்னர் ஹமத் கடந்த ஆண்டு 17ஆவது மாமன்னராக சுல்தான் இப்ராஹிமின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்.





