நிறுத்தப்படும் ‘தெற்கு எக்ஸ்பிரஸ்’ ரயில் சேவை: ஜனவரி 1 முதல் ETS ரயில்கள் முழுமையாகச் செயல்படும்!

கோலாலம்பூர்:

கிம்மாஸ் – ஜொகூர் பாரு சென்ட்ரல் (Gemas-JB Sentral) வழித்தடத்தில் கடந்த 9 ஆண்டுகளாகச் சேவை வழங்கி வந்த ‘தெற்கு எக்ஸ்பிரஸ்’ (Ekspres Selatan) ரயில் சேவை, வரும் ஜனவரி 1 முதல் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்படுவதாக மலாயன் ரயில்வே நிறுவனம் (KTMB) அறிவித்துள்ளது.

தற்போது இயக்கத்தில் உள்ள ரயில் எண்கள் 41, 42, 43, 44, 45 மற்றும் 46 ஆகிய 6 தெற்கு எக்ஸ்பிரஸ் சேவைகளும் ரத்து செய்யப்படுகின்றன.

இதற்கு காரணம், கிம்மாஸ் – ஜொகூர் பாரு இடையிலான மின்மயமாக்கப்பட்ட இரட்டை இரயில் பாதை திட்டம் (EDTP) நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து, சேவைகளை நவீனப்படுத்தவும் மேம்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டாலும், பயணிகள் கவலைப்படத் தேவையில்லை. ஜனவரி 1 முதல் ஜொகூர் பாரு சென்ட்ரல் வரை மின்சார ரயில் சேவை (ETS) முழுமையாகத் தொடங்கப்படும்.

தினசரி 8 ETS சேவைகள் இயக்கப்படும். இதன் மூலம் பயணிகள் மிகவும் நவீனமான, வசதியான மற்றும் விரைவான பயண அனுபவத்தைப் பெறுவார்கள் என்று KTMB தெரிவித்துள்ளது.

அதேநேரம் எக்ஸ்பிரஸ் ராக்யாட் தீமுரான் (ERT): ஜோகூர் பாரு சென்ட்ரல் – தும்பாட் (Tumpat) வழித்தடத்திலான இரவு நேர ரயில் சேவை வழக்கம் போல் தொடரும்.

ஷட்டில் தீமுரான் (Shuttle Timuran): கிம்மாஸ் மற்றும் தும்பாட் இடையே உள்ள சிறிய ரயில் நிலையங்களுக்குச் செல்பவர்கள் இந்த சேவையை மாற்றாகப் பயன்படுத்தலாம் என்றும் அது தெரிவித்துள்ளது.

“தெற்கு எக்ஸ்பிரஸ் ரயிலுடன் பயணித்த பயணிகளின் நினைவுகளும் ஆதரவும் எங்களுக்கு என்றும் மறக்க முடியாதவை. இப்போது நவீன காலத்திற்கு ஏற்ப பாதுகாப்பான மற்றும் வேகமான ETS சேவையை நோக்கி நாம் மாறுகிறோம்,” என்று, KTMB-யின் செயல்முறைத் தலைமை நிர்வாக அதிகாரி அஹ்மத் நிஜாம் முகமட் அமீன் தெரிவித்தார்.

பயணிகள் தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிடவும், புதிய கால அட்டவணையை KTMB செயலி அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களுக்கு 03-9779 1200 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here