வங்காளதேசம்: பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்ற பி.என்.பி. கட்சி அலுவலகம் தீ வைத்து எரிப்பு

டாக்கா,வங்காளதேசத்தில் 2 ஆண்டுகளுக்கு பின்னர், நாடாளுமன்றத்திற்கான 13-வது பொது தேர்தல் கடந்த 12-ந்தேதி நடைபெற்றது. இதில், வங்காளதேச தேசியவாத கட்சி வேட்பாளர்கள் 209 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். அந்த கூட்டணி, ஆட்சியமைக்க தேவையான அளவுக்கும் கூடுதலாக, மொத்தம் 212 இடங்களை கைப்பற்றி உள்ளது.

இந்த தேர்தலில் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி 68 இடங்களை வென்றுள்ளது. இதனால், அக்கட்சி எதிர்க்கட்சி வரிசையில் சேரவுள்ளது. வங்காளதேச தேசியவாத கட்சியை சேர்ந்த தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராகிறார். தாரிக்கின் புதிய அமைச்சரவை வருகிற 17-ந்தேதி பதவியேற்க உள்ளது. வங்காளதேச ஜனாதிபதி முகமது சஹாபுதீன் மந்திரிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார்.

பிரதமர் தேர்தலில் வங்காளதேச தேசியவாத கட்சி பெருவாரியான தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ள சூழலில், நாராயண்கஞ்ச் நகரில் ரூப்கஞ்ச் பகுதியில் அக்கட்சி அலுவலகம் ஒன்று அமைந்துள்ளது. அதனை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியுள்ளனர்.

இதுபற்றி ரூப்கஞ்ச் காவல் நிலைய உயரதிகாரி ஷாப்ஜெல் உசைன் கூறும்போது, மர்ம நபர்கள் சிலர் அலுவலக கண்ணாடியை உடைத்து உள்ளே பெட்ரோல் அல்லது உடனே தீப்பற்றி எரிய கூடிய பொருளை எடுத்து பற்ற வைத்து வீசினர். இதில், சந்தேகத்திற்குரிய 2 பேரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது என கூறினார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இந்த அலுவலகத்தின் கட்டுமான பணி தொடங்கி ஒரு வாரத்திற்கு முன்பே அந்த பணி நிறைவடைந்தது.

இந்த சூழலில், அலுவலகம் தீ வைத்து கொளுத்தப்பட்டு உள்ளது. இதில், நாற்காலிகள் உள்ளிட்ட மரச்சாமான்கள் தீயில் எரிந்து நாசமடைந்து விட்டன. அரசியல் எதிரிகளால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்க கூடும் என அக்கட்சியை சேர்ந்த பஷீர் உத்தீன் கூறியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here