ஈரான் முன்னாள் உச்ச தலைவர் காமேனி பயன்படுத்திய விமானம் அழிப்பு; இஸ்ரேல் விமான படை

டெல் அவிவ் ஈரான் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி பயன்படுத்திய விமானம் தாக்கி அழிக்கப்பட்டு உள்ளது என இஸ்ரேல் விமான படை தெரிவித்து உள்ளது. ஈரானின் தெஹ்ரான் நகரில் உள்ள மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையத்தில், காமேனி பயன்படுத்திய விமானம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இதனை இலக்காக கொண்டு இஸ்ரேல் விமான படை இன்று தாக்கி, அதனை அழித்து உள்ளது. இதனால், ஈரானின் ராஜதந்திர ஸ்திர தன்மைக்கு ஏற்பட்ட பெரிய பாதிப்பாக இது பார்க்கப்படுகிறது.

இதுபற்றி இஸ்ரேல் விமான படை தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டு உள்ள செய்தியில், ஈரானின் பயங்கரவாத ஆட்சியின் தலைவருடைய விமானம், தெஹ்ரானிலுள்ள மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அழிக்கப்பட்டு விட்டது என தெரிவித்து உள்ளது.

நவீன ராணுவ ஆயுத கொள்முதலுக்கும் மற்றும் கூட்டணி நாடுகளுடன் உறவுகளை பராமரிப்பதற்கும் இந்த விமானம் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த சூழலில், விமானம் தகர்ப்பால், ஈரானின் பயங்கரவாத ஆட்சியின் தலைமைக்கும் கூட்டணி நாடுகளுக்கும் இடையேயான ஒருங்கிணைப்பை பாதிப்படைய செய்துள்ளோம். ராணுவ அதிகார கட்டமைப்பையும் தகர்த்து இருக்கிறோம் என்று இஸ்ரேலின் ராணுவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here