பாகிஸ்தானின் கராச்சியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழை – 19 பேர் உயிரிழப்பு

கராச்சி,பாகிஸ்தானின் கராச்சியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் 19 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சயீதாபாத் பகுதியின் மோச்கோ கோத் என்னும் இடத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததில் அங்கிருந்த தொலைபேசி நிலையத்தின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் அங்கு அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்த 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து அந்த இடத்தில் இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருவதாகவும், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கோரங்கியில் ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தம்பதி உயிரிழந்தனர். மலிரில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்தனர். கிளிப்டன் பகுதியில் மரக்கிளை முறிந்து விழுந்து ஒரு பெண் உயிரிழந்துள்ளார். லந்தி பகுதியின் மஜீத் காலனியிலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. கனமழை காரணமாக நகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இன்றும், நாளையும் பலத்த காற்று வீசும் என்றும், கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் வீட்டிலேயே இருக்குமாறும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here