சத்தீஷ்கார் சிறையில் 285 கைதிகள் பலி; என்.எச்.ஆர். ஆணையம் தானாக முன்வந்து விசாரிக்க முடிவு

ராய்ப்பூர் சத்தீஷ்காரில் உள்ள பல்வேறு சிறைகளில் கடந்த 4 ஆண்டுகளில் 285 கைதிகள் பலியாகி உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி தானாக முன்வந்து விசாரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்.எச்.ஆர். ஆணையம்) முடிவு செய்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன் ஊடகத்தில் வெளியான செய்தியில், சத்தீஷ்காரில் உள்ள பல்வேறு சிறைகளில் நெருக்கடி அதிகம் உள்ளது என்றும், அதனால், தொற்று பரவல் ஏற்படுவதுடன், கைதிகளிடையே மனஅழுத்தமும் அதிகரிக்கிறது என தெரிவித்து இருந்தது.

சிறைகளில் போதிய மருத்துவர்களோ, மனநல ஆலோசகர்களோ இல்லாததும், மருத்துவ வசதி இல்லை என்றும் ஊடகத்தில் வெளியான தகவல் தெரிவித்தது. இதனை கவனித்து, அதனை அடிப்படையாக கொண்டு விசாரிப்பது என்று என்.எச்.ஆர். ஆணையம் முடிவுக்கு வந்துள்ளது. இது பாதிக்கப்பட்டவர்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறும் தீவிர செயல் என சூழலை சுட்டி காட்டியதுடன், வாழ்வதற்கான உரிமை மற்றும் சுகாதாரத்திற்கான உரிமை ஆகியவற்றை மீறுகிற விசயம் ஆகும் என்று குறிப்பிட்டு உள்ளது.

இதில், 2022-ம் ஆண்டில் சத்தீஷ்கார் சிறைகளில் அதிக அளவாக 90 மரணங்கள் ஏற்பட்டு உள்ளன. 2025, ஜனவரி 1-ந்தேதி முதல் நடப்பு ஆண்டு ஜனவரி 31-ந்தேதி வரை 66 கைதிகள் மரணம் அடைந்துள்ளனர் என தெரிவித்து உள்ளது.

ஆந்திர பிரதேசத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கலப்பட பால் குடித்து 16 பேர் பலியான சம்பவம் தொடர்பாக தானாக முன்வந்து விசாரிக்கவும், தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதேபோன்று, சமீபத்தில், டெல்லியில் அடுக்குமாடி கட்டிட தீ விபத்தில், ஒரே குடும்பத்தில் 9 பேர் பலியான விவகாரம் தொடர்பாகவும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க முடிவு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here