மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை…

புதுடெல்லி,ஈரான் மீதான போரின் காரணமாக உலக நாடுகள் எரிபொருள் நெருக்கடிக்கு ஆளாகி உள் ளன. ஆனால் போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பு நாடுகளுடனும் நட்புறவை சிறந்த முறையில் பேணி வருவதால் இந்தியா அந்த நெருக்கடியில் இருந்து ஓரளவு தப்பி வருகிறது.

இந்தநிலையில், பிரதமரின் வெளியுறவு நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என எதிர்க் கட்சிகள் கூறி வந்தன. அவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக பிரதமர் மோடி 2 நாட்க ளுக்கு முன்பு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதுபற்றி பேசினார்.

எரிபொருள் வினியோகம் எந்த அளவில் இருக்கிறது, வெளியுறவு பேச்சுவார்த்தைகள் எப்படி நடந்துள்ளன? என்பது பற்றி அவர் விளக்கம் அளித்தார்.

இந்த பிரச்சினையை சமாளிக்க மாநிலங்களின் ஒத்துழைப்பையும் கேட்டார். கொரோனா காலத்தைப் போல ‘டீம் இந்தியா’ ஒருங்கிணைப்பு தேவை என அவர் குறிப்பிட்டார்.

இதுபோல இந்த விஷயத்துக்காக அனைத்துக்கட்சி தலைவர்களையும் அழைத்து நேற்று முன்தினம் நாடாளுமன்ற வளாகத்தில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது.

இதற்கிடையே, நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இருப்பதாகவும், எரிபொருளின் இருப்பு 6 நாட்களுக்கு மட்டுமே உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகின. அதனை அரசு மறுத்து நேற்று விரிவான அறிக்கை வெளியிட்டது.

இந்த நிலையில் பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடனும் காணொலி காட்சி மூலமாக கலந்துரையாடி வருகிறார். மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் மாநிலங்கள் செய்திருக்கும் தயார்நிலைகள் மற்றும் செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்து அவர் ஆய்வு நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி, மேற்கு ஆசிய மோதல் தொடர்பாக சந்திப்பு நடத்துவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கலந்துரையாடலில் தமிழ்நாடு, கேரளம், அசாம், மேற்குவங்காளம், புதுச்சேரி உள்பட தேர்தலை எதிர்கொள்ளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் பங்கேற்கவில்லை. அவர்களுக்கு பதிலாக அந்த மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் பின்னர் நடைபெறும் ஒரு கூட்டத்தில் அமைச்சக அதிகாரிகளோடு பேசுவார்கள் என தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here