தெற்கு ஆத்தூரில் டாஸ்மாக் கடை மூடல்: பொதுமக்கள் மகிழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெற்கு ஆத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்களுக்கும், மாணவ-மாணவிகளுக்கும் பெரும் இடையூறாக இருந்து வந்த டாஸ்மாக் மதுக்கடை, தமிழக முதல்-அமைச்சர் விஜய் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் அதிகாரிகளால் அதிரடியாக மூடப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தெற்கு ஆத்தூர் பேருந்து நிறுத்தம் என்பது பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர் மற்றும் வியாபாரிகள் தினசரி வந்து செல்லும் ஒரு முக்கியப் பகுதியாகும். இதன் அருகிலேயே டாஸ்மாக் கடை இயங்கி வந்ததால், மதுப்பிரியர்களின் தொல்லையால் பெண்கள் மற்றும் வணிகர்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இந்த மதுக்கடையை அங்கிருந்து அகற்ற வலியுறுத்தி, சில மாதங்களுக்கு முன்பு ஆத்தூர் சுற்றுவட்டார நாடார் உறவின்முறை சங்கத்தினருடன் இணைந்து அனைத்துத் தரப்பு மக்களும், வியாபாரிகளும் திரண்டு பிரம்மாண்ட சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகளும், காவல்துறையினரும் பேச்சுவார்த்தை நடத்தி, கடையை விரைவில் மூட உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இருப்பினும், அதன் பிறகு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மக்கள் ஏமாற்றமடைந்திருந்தனர். இந்தச் சூழலில், தமிழகத்தில் முதற்கட்டமாக 717 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட முதல்-அமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின்படி, நேற்று முன்தினம் அதிகாரிகள் தெற்கு ஆத்தூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்த டாஸ்மாக் கடையைப் பூட்டி, சீல் வைத்தனர்.

நீண்ட நாட்களாக தங்களுக்கு பெரும் சிரமத்தைக் கொடுத்து வந்த மதுக்கடை தற்போது முழுமையாக மூடப்பட்டதை அடுத்து, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடினர். மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சர் விஜய்க்கு தெற்கு ஆத்தூர் மக்கள் தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here