தொன்னூறாம் அகவையில் அடியெடுத்து வைக்கும் குமரன் (14.5.1937)

­மலேசிய இந்திய சமூகத்தைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதி, கல்வியாளர் மற்றும் சமூகத் தலைவர் ஆவார். மலேசிய இந்திய காங்கிரஸ் (MIC) கட்சியில் நீண்ட காலம் தலைமைப் பொறுப்புகளை வகித்ததுடன், நாடாளுமன்றம் மற்றும் மாநில அரசியலிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.

அரசியல் வாழ்க்கை
க. குமரனின் அரசியல் பயணம் 1954 ஆம் ஆண்டு தொடங்கியது. அவ்வாண்டில் பினாங்கு மாநிலம் பிறை நகரில் நடைபெற்ற ம.இ.கா. எட்டாவது தேசிய பேராளர் மாநாட்டில் தன்னார்வலராகச் அரசியலில் காலடி எடுத்து வைத்தவர் 1971-ஆம் ஆண்டு பேரா மாநில ம.இ.கா. தேர்தலில் ஒரு வாக்கு பெரும்மபான்மையில் வெற்றிபெற்று தீவிர அரசியலில் ஈடுபடலானார். 1975-ஆம் ஆண்டில் மாநில செயலாளராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர், 1981-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் கடுமையான போட்டிக்கிடையே மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பேராக் மாநில ம.இ.கா. தலைவர் பதவியை நீண்ட காலம் வகித்த தலைவராகக் இவர் கருதப்படுகிறார். 17 ஆண்டுகள் தொடர்ந்து மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநில ம.இ.கா. தொடர்புக் குழுத் தலைவர் பதவியை மாநில பேராளர்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுத்த கடைசி தலைவராகவும் அறியப்படுகிறார்.

1975-ஆம் ஆண்டில் 112 கிளைகளுடன் மாநில செயலாளர் பொறுப்பேற்ற இவர் 1999-இல் பதவி ஓய்வு பெறும்போது பேரா ம.இ.கா.வில் 820 கிளைகளை விட்டுச் சென்றார். 1991 முதல் 2000 வரை ம.இ.கா. தேசிய உதவித் தலைவராக மூன்று தவணைகள் பதவி வகித்த இவர் 1974 முதல் 1991 வரை ம.இ.கா. மத்திய செயற்குழு உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.

 

2009 முதல் 2012 வரை ம.இ.கா. தேசியப் பேரவை சபாநாயகராகவும், எட்டாவது தேசியத் தலைவர் தேர்தல் குழுத் தலைவராகவும் செயல்பட்டுள்ளார். 1980 மற்றும் 1990-களில் ம.இ.காவில் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக வலம்வந்தார். 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற ம.இ.கா. தேசியத் தலைவர் தேர்தலில் துன் சாமிவேலு அவர்களுக்கு இவர் தலைமையில் பேராக் மாநில ம.இ.கா. வழங்கிய பேராதரவு அவருக்கு வெற்றியைத் தேடிதந்து சரித்திரம் படைத்தது.

­அரசு பதவிகள்
க. குமரன் 1975 முதல் 1979 வரை ஈப்போ மாநகராட்சி மன்ற உறுப்பினராக தனது அரசு சேவையைத் தொடங்கினார். பின்னர் 1979 முதல் 1985 வரை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக (செனட்டர்) நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 1986 முதல் 1990 வரை பேராக் மாநில சட்டமன்ற சுங்காய் தொகுதி உறுப்பினராகப் பணியாற்றினார். 1990 முதல் 1999 வரை தொடர்ந்து இரண்டு தவணைகள் தாப்பா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இக்காலப்பகுதியில் நல்வாழ்வுத்துறை அமைச்சின் நாடாளுமன்ற செயலாளராகவும் புறநகர் வளர்ச்சி துணை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

1985 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 40வது பேரவையில் மலேசியாவை பிரதிநிதித்து மூன்று மாதங்கள் பணியாற்றியுள்ளார். 25 ஆண்டு கால பேரா ம.இ.கா.வில் இவரது பயணம் பல மாறுதல்கள், சீர்திருத்தங்களையும் கண்டது. 1975 ஆம் ஆண்டு மாநில செயலாளராகப் பொறுப்பேற்ற ஒரு ஆண்டிற்குள் மாநில ம.இ.கா.விற்கு நான்கு மாடிக் கட்டிடம் பெற்றுத் தரப்பட்டது.

1981 ஆம் ஆண்டு மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற ஆறு மாதங்களுக்குள் அயரா முயற்சியால் பேராக் மாநிலத்தில் தைப்பூசம் அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. சமூக மற்றும் இளைஞர் இயக்கப் பங்களிப்பு அரசியலில் அடிவைப்பதற்கு முன்பாக க. குமரன் இளைஞர் இயக்கங்களில் தீவிரமாக ஈடுபட்டார்.

­

மலேசிய தமிழ் இளைஞர் மணி மன்றப் பேரவையின் அமைப்பாளர்களில் ஒருவராகவும் அதன் முதல் துணைத்தலைவராகவும் பணியாற்றினார். பேராக் மாநிப்பேரவை மற்றும் ஈப்போ மன்றம் ஆகியற்றின் தோற்றுனராகவும் தலைவராகவும் பணி யாற்றியுள்ளார். தொழிற்சங்க இயக்கங்களிலும் தன்னை ஈடுபடுத்திகொண்ட அவர், மலாயா தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தேசிய சங்கத்தின் தோற்றுநர்களில் ஒருவராகவும் பேராக் மாநிலத் தலைவராகவும் சேவையாற்றியுளார்.

பேராக் மாநில இந்திய ஆசிரியர் கூட்டுறவுக் கழகத்தின் தோற்றுநர்களில் ஒருவராக இருந்துடன், அதன் செயலாளராகவும் சேவையாற்றியதுடன் கூட்டுறவ்க் கழகம் இரண்டுமாடிக் கட்டடம் வாங்க துணைநின்றார். தொழிலாளர் மேம்பாட்டுக் கூட்டுறவுக் கழகத்தை துன் சாமிவேலுவுடன் இணைந்து தோற்றுவித்ததுடன், அதன் இயக்குநர் மற்றும் பொருளாளராகவும் பணியாற்றினார். மேலும், எம்.ஐ.இ.டி. (MIED) நிறுவனத்தின் ஆரம்பகால இயக்குநராக நீண்ட காலம் செயல்பட்டார்.

கல்வி – ஆசிரியர் வாழ்க்கை :
1946-ஆம் ஆண்டில் பினாங்கு, புக்கிட் மெற்தாஜம் இராமநாதன் தமிழ்ப் பள்ளியில் முதல் வகுப்பில் அடி எடுத்து வைத்த க. குமரன் 1954 ஆம் ஆண்டு பினாங்கு பத்துகாவான் தோட்டத்தில் தமிழ் ஆசிரியராக தனது பணியைத் தொடங்கினார்.

1956 ஆம் ஆண்டு தோட்டத்து இளைஞர்களிடையே மறுமலர்ச்சி சிந்தனையை விதைப்பதாகக் குற்றம்சாட்டி தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டபோதிலும், பின்னர் பேரா மாநிலத்தில் 1960 ஆம் ஆண்டு ஈப்போ அரசினர் (சுங்கை பாரி) தமிழ்ப்பள்ளி, சிம்பாங் லீமா அரசினர் தமிழ்ப்பள்ளி சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலை ஆகியவற்றில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

1967 முதல் கிரிக் தமிழ்ப்பள்ளி ஈப்போ குணோங் ராபாட் தமிழ்ப்பள்ளிகளில் தலைமையாசிரியராகப் பணியாற்றியவர் 1979 ஆம் ஆண்டு முழுநேர அரசியலில் ஈடுபடுவதற்காக ஆசிரியர் பணியிலிருந்து விலகினார். 2017 ஆம் ஆண்டு மலேசிய அரசால் பொதுத் தேர்வுகளை ஆய்வு செய்யும் சிறப்பு குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

பல்கலைக் கழகத்தில் அற நிதி
மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை மாணவர்களின் கல்வி நலன் பேண கல்வி நிதி உருவாக்கும் முயற்சியில் துறைத் தலைவர் இணைப்பேராசிரியர் முனைவர் கிருஷ்ணன் மனியம் அவர்களுடன் இணைந்து, தான்ஸ்ரீ சோமா மொழி இலக்கிய வாரிய அறநிதி, சிங்கப்பூர் முஸ்தபா அறவாரிய அறநிதி, ஓம்ஸ் அறவாரிய அறநிதி, அமைய காரண்மாய் இருந்துடன் 306,580.00 ரிங்கிட்டில் தமிழ்வேள் கோசாரங்கபாணி அறநிதியைத் தோற்றுவித்துள்ளார்.

இத்துடன், தமது சொந்த முயற்சியாக, . இந்திய ஆய்வியல் துறை சிறந்த மாணவர்க்கு ஆண்டுதோறும் புத்தகப் பரிசு வழங்க ரிங்கிட் 30,000மும் உப்சி பலகலைக் கழக சிறந்த இந்திய மாணவர்க்கு சிறப்பு பரிசு வழங்க ரிங்கிட் 20,000யையும் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

குடும்ப வாழ்க்கை
14.5.1937இல் கருணாகரன் அம்மாக்கண்ணு இணையர்க்கு பினாங்கு, பிறை சிற்றூரில் பிறந்தவர். 1965 ஆம் ஆண்டு புவான்ஸ்ரீ வசந்தா சேதுராமையரை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுகொண்ட இவர்களுக்கு அருட்செல்வி (விரிவுரையாளர்), அருட்செல்வம் (கணக்காளர்), டாக்டர் அருளாளன் (மலேசிய மருத்துவ கவுன்சில் ) மற்றும் வழக்கறிஞர் அருணன் (அரசு உயர் அலுவலர்) ஆகிய நால்வர் மக்கள். மூன்று மருமக்கள், ஐந்து பேரப்பிள்ளைகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here