தொழிலாளர் பாதுகாப்பு: இந்தோனேசிய அமைச்சருடன் ரமணன் இருதரப்பு பேச்சுவார்த்தை

மலேசியாவிலுள்ள இந்தோனேசியத் தொழிலாளர்களின் நிர்வாகம், பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், இந்தோனேசிய புலம்பெயர்ந்த தொழிலாளர் பாதுகாப்புத் துறை அமைச்சர் முக்தாருதீன் தலைமையிலான தூதுக்குழுவுடன் விரிவாகக் கலந்துரையாடினார்.

தம்மைச் சந்திக்க வந்த இந்தோனேசிய அமைச்சரின் மரியாதை நிமித்தமான இந்த வருகையின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் தொழிலாளர் நலம் சார்ந்த பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் அமைச்சர் ரமணன் தெரிவித்தார்.

வட்டார அளவில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நெருக்கமான உறவு, நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு வலுசேர்ப்பதோடு, தொழிலாளர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் நலனையும் மேம்படுத்துவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது என்று வெள்ளிக்கிழமை (மே 22) வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.

 

மலேசியாவும் இந்தோனேசியாவும் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலம் எனப் பன்முகத்தன்மை கொண்ட நீண்டகால இருதரப்பு உறவுகளைக் கொண்டுள்ள மிக முக்கிய உத்தேசக் கூட்டாளிகளாக விளங்குகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அண்டை நாடுகளுக்கு இடையிலான இந்த நெருக்கமான மற்றும் இணக்கமான சூழல், எதிர்காலத்திலும் மேலும் வலுப்படுத்தப்பட்டு இரு நாட்டு மக்களின் பரஸ்பர செழிப்புக்கும் கூட்டு வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் எனத் தாம் பெருமளவும் நம்புவதாகவும் அமைச்சர் ரமணன் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here