கோலாலம்பூர்:
பி.கே.ஆர் கட்சியில் இருந்து தாம் வெளியேறுவதற்கு முன்பாக, தாமும் கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் நிக் நஸ்மியும் கடந்த ஓராண்டு காலமாகப் கடுமையான அரசியல் அழுத்தங்களை எதிர்கொண்டதாக அதன் முன்னாள் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ரஃபிஸி ரம்லி தெரிவித்துள்ளார்.
கட்சியின் அதிகாரப்பூர்வ இயந்திரத்தையே தங்களுக்கு எதிராகப் பயன்படுத்தி, தொடர் நெருக்கடிகளையும் தங்களது குடும்பத்தினர் மீதான மறைமுகத் தாக்குதல்களையும் ஒரு தரப்பினர் அரங்கேற்றியதாக ரஃபிஸி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
பிரதமரும் பி.கே.ஆர் கட்சியின் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தங்களை நேரடியாகப் பதவியிலிருந்து நீக்கவில்லை என்று குறிப்பிட்ட ரஃபிஸி, மாறாகத் தங்களுக்குக் கீழ் உள்ள கீழ்மட்ட நிர்வாகிகளைக் கொண்டே தங்களுக்கு எதிரான இந்த நெருக்கடிகளைச் செய்ய அவர் அனுமதித்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தாங்கள் முறைப்படி கட்சியை விட்டு வெளியேறிய பிறகு, தம்மீது சுமத்தப்படும் ‘துரோகிகள்’ என்ற குற்றச்சாட்டு முற்றிலும் அடிப்படையற்றது என்றும், அதனைத் தாம் வன்மையாக மறுப்பதாகவும் ரஃபிஸி ரம்லி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.




















