நாடு உலகளாவிய விநியோக நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில், எரிபொருள் விலையை உயர்த்துவதற்கான பரிந்துரைகளைத் தாம் ஏற்கவில்லை என்று பிரதமர் அன்வர் இப்ராஹிம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
மக்களுக்குச் சுமையை ஏற்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக, ஒவ்வொரு மாதமும் பெரும் செலவானாலும், எரிபொருள் மானியங்களுக்கான செலவை ஈடுசெய்ய அரசாங்கம் தொடர்ந்து முயற்சிக்கும் என்று அன்வர் கூறினார்.
எண்ணெய் விலை உயர்ந்தபோது, நாங்கள் மாதம் RM5 பில்லியன், RM3 பில்லியன் செலுத்தினோம். பின்னர் அது மாதம் RM7 பில்லியனாக உயர்ந்தது, இப்போது RM4 பில்லியனாகக் குறைந்துள்ளது என்று அவர் இன்று இங்கு ‘ரக்கான் மூடா’ நிகழ்வைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
இந்தத் தொகை அதிகமாக இருந்தாலும், தேசிய நிதிக் கசிவைத் தடுப்பதுடன் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமும் அரசாங்கத்தால் அதை ஈடுசெய்ய முடியும் என்று பிரதமர் கூறினார். எண்ணெய் மானியங்களுக்கான செலவைத் தொடர்ந்து சந்திப்பதற்காக அரசாங்கம் கடன் வாங்க வேண்டும் அல்லது கடனில் மூழ்க வேண்டும் என்ற ஒரு பரிந்துரையையும் அன்வர் நிராகரித்தார்.
என்னால் இப்போது கடனில் மூழ்க முடியும், ஆனால் நான் அரசாங்கத்தை விட்டு வெளியேறிய பிறகு, அடுத்த தலைமுறை குழந்தைகள்தான் அதைச் சுமக்க வேண்டியிருக்கும். அதனால்தான் கடன் வாங்குவது தீர்வாகாது, எனவே எங்களால் முடிந்ததைச் செய்வோம் என்று அவர் கூறினார்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை, உலகின் மிகக் குறைந்த விலைகளில் ஒன்றான பெட்ரோல் விலையை மலேசியர்கள் அனுபவிக்க வழிவகுத்துள்ளது என்று அன்வர் கூறினார். மானிய விலையில் வழங்கப்படும் RON95 பெட்ரோல் ஒரு லிட்டர் RM1.99-க்கு விற்கப்படுகிறது. அதே நேரத்தில் மானியமில்லாத் RON95-இன் பம்ப் விலை ஒரு லிட்டர் RM3.72 ஆகும்.








