முதல்-அமைச்சர் விஜயுடன் போர்டு நிறுவனத்தின் உயர்மட்டக் குழுவினர் சந்திப்பு…

சென்னை,தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
முதல்-அமைச்சர் விஜய்யை இன்று (20.7.2026) தலைமைச் செயலகத்தில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான போர்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் மேத்யூ கோட்லெவ்ஸ்கி (Thiru. Mathew Godleweski) தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்பின்போது, இந்நிறுவனம், தமிழ்நாட்டில் தனது உற்பத்தி திட்டத்தை மீண்டும் தொடங்குவது பற்றியும், தற்போது நிறுவியுள்ள உலகளாவிய திறன் மையங்கள் விரிவாக்கம் தொடர்பாகவும், இனிவரும் காலங்களில், உற்பத்தித் துறையில் மேற்கொள்ளப்படவுள்ள விரிவாக்க திட்டங்கள் குறித்தும் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

போர்டு நிறுவனம்
போர்டு நிறுவனம், சென்னையில், ஒரு மிகப்பெரிய உலகளாவிய திறன் மையம் ஒன்றினை செயல்படுத்தி வருகிறது. 12,000 தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், சமீபத்தில்தான், இந்நிறுவனம், கோயம்புத்தூரில் ஒரு உலகளாவிய திறன் மையம் நிறுவியுள்ளது. அதுமட்டுமின்றி, தற்போது உள்ள மறைமலை நகர் உற்பத்திச் சாலையில், 3250 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், இன்ஜின்கள் உற்பத்தி தொடங்க உள்ளது.

விரிவாக்க திட்டங்கள்
இச்சந்திப்பின்போது, போர்டு நிறுவனத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையேயான 30 வருட உறவை நினைவுகூர்ந்த முதல்-அமைச்சர், விரைவில் இந்நிறுவனம் மேற்கொள்ளப்பட உள்ள உற்பத்தித் திட்டத்திற்கு அனைத்து ஒத்துழைப்பையும் அரசு வழங்கும் என்று முதல்-அமைச்சர் உறுதியளித்தார்கள். மேலும், மறைமலைநகர் உற்பத்திச் சாலையை முழு அளவிற்கும் பயன்படுத்திடும் வகையில், போர்டு நிறுவனம், மீண்டும் தனது உற்பத்தியையும், விரிவாக்க திட்டங்களையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் கேட்டுக் கொண்டார்கள்.

இந்நிகழ்வில், தொழில் துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ச. விஜயகுமார், ஐ.ஏ.எஸ்., வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் தீபக் ஜேக்கப், ஐ.ஏ.எஸ்., போர்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சிமோனெட்டா வெர்டி (Ms. Simonetta Verdi), போர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவு இயக்குநர் தீரஜ் தீக்ஷித், Country Director முனைவர் ஸ்ரீபாத் பட், இயக்குநர் வி. ராஜா விமல குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here