நடுவானில் விமானத்திற்கு 300 அடி தொலைவில் நெருங்கிய பறக்கும் தட்டு; விமானி அதிர்ச்சி…

லண்டன் இங்கிலாந்தில் நடுவானில் விமானம் வந்தபோது, 300 அடி தொலைவில் பறக்கும் தட்டு நெருங்கி விமானிக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் கேட்விக் விமான நிலையத்தில் ஏர்பஸ் ஏ319 என்ற பயணிகள் விமானம் தரையிறங்க வேண்டி இருந்தது. இதற்காக கேட்விக் பகுதிக்கு தெற்கே 7 மைல்கள் தொலைவில், சசெக்ஸ் கவுன்டி பகுதியில் ஹேங்கிராஸ் அருகே நடுவானில் பறந்து வந்து கொண்டிருந்தது.

மர்ம பொருள்
விமானம் தரையிறங்க சில நிமிடங்கள் இருக்கும்போது, அந்த சம்பவம் நடந்தது. திடீரென மர்ம பொருள் ஒன்று மெதுவாக மேலே எழும்பி வந்தது. விமானிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், விமானத்தின் வலது இறக்கை பகுதியருகே வட்ட வடிவிலான அந்த பறக்கும் தட்டு 100 முதல் 300 அடி இடைவெளியில் விமானத்திற்கு மிக நெருங்கிய தொலைவில் வந்துள்ளது.

தூரத்திலேயே விமானி அதனை கவனித்து விட்டார். வேறு திசைக்கு செல்வதற்கு ஏற்ப விமானமும், முன்பே திசை திருப்பப்பட்டு விட்டது. இதனால், பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும், விமானம் தரையிறங்கியதும் இதுபற்றி உயரதிகாரிகளுக்கு விமானி தகவல் தெரிவித்து உள்ளார்.

பறக்கும் தட்டு
அது ஒரு வட்ட தட்டு அல்லது பறக்கும் தட்டு அல்லது டிரோனாக இருக்க கூடும் என அதிகாரிகளிடம் கூறியுள்ளார். அது, விமானத்திற்கு எதிர் திசையில் மிக நெருக்கத்தில், விமானத்தின் மட்டத்திற்கு இணையாக அதே மட்டத்தில் வந்தது. வலது இறக்கை பகுதியில் கடந்து சென்றது என கூறியுள்ளார்.

அந்த தட்டின் வெளிப்புற விளிம்பு பகுதிகளில் கருப்பு நிறத்தில் அடையாளங்கள் இருந்தன. அது நவீன டிரோனாக இருக்க கூடும். ஆனால், அதன் சரியான அடையாளமோ அல்லது எந்த பகுதியில் இருந்து வந்தது என்றோ தெரியவில்லை என கூறியுள்ளார்.

அதிகாரிகள் எச்சரிக்கை
அந்த பகுதியில் வேறு விமானிகளும் இல்லை. இதனால், அதனை வேறு யாரும் பார்க்கவுமில்லை. அந்த மர்ம பொருள் எந்த வகையானது என தெரிய வரவில்லை. எனினும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர். இதுபற்றி இங்கிலாந்தின் ஏர்பிராக்ஸ் என்ற தனியார் அமைப்பு தீவிர கவனம் கொண்டு நிலைமையை பற்றி கண்காணித்து, தீர விசாரித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here