மூடநம்பிக்கையைப் பயன்படுத்தி RM600,000 மோசடி: சீன நாட்டவர்கள் அடங்கிய போலி ‘ஜோதிட’ கும்பல் கைது!

கோலாலம்பூர்:

ஜோதிடம் பார்த்தல், கெட்ட ஆவிகளை விரட்டுதல் மற்றும் பரிகாரப் பூஜைகள் செய்வதாகக் கூறி சுமார் RM600,000 வரை மோசடி செய்த போலி ‘ஆன்மீக’க் கும்பலைச் சேர்ந்த 12 பேரைச் சபா மாநிலக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த வார இறுதியில் (ஆகஸ்ட் 8 மற்றும் 9) கோத்தா கினபாலு, பெனாம்பாங், கெனிங்காவ் மற்றும் கோத்தா பெலுட் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட சிறப்புச் சோதனைகளில் 10 பெண்கள், 2 ஆண்கள் உட்படச் சீன நாட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகச் சபா மாநிலத் துணைப் போலீஸ் ஆணையர் டத்தோ முகமத் அசார் ஹாமின் தெரிவித்தார்.

சோதனையின் போது 13 கைபேசிகள், 7 கடவுச்சீட்டுகள், ரிங்கிட், சீன யுவான் (RMB) மற்றும் தாய் பாட் (Baht) ஆகிய வெளிநாட்டுப் பணங்கள் அடங்கிய RM20,000 ரொக்கம் மற்றும் 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பாதிக்கப்பட்டவர்களை நெருங்கும் இக்கும்பல், குடும்பத்திற்கு ஆபத்து அல்லது துரதிர்ஷ்டம் இருப்பதாகப் பயமுறுத்தும். பின்னர், பரிகாரம் செய்வதாகக் கூறி ரொக்கப் பணம் மற்றும் தங்க நகைகளைப் பிளாஸ்டிக் பையில் வாங்கி வைத்துக் கொண்டு, அதைத் தந்திரமாக வேறு பையுடன் மாற்றி விடுவர். குறிப்பிட்ட நாட்களுக்குப் பையைத் திறக்கக் கூடாது எனக் கூறிவிட்டுத் தப்பிச் சென்றுவிடுவர்.

இக்கும்பல் மீது குறைந்தபட்சம் 5 முதல் 6 வழக்குகள் பதிவாகியுள்ளன. கைதானவர்களில் கோட்டா கினபாலு வழக்கில் தொடர்புடையவர்கள் ஆகஸ்ட் 14 வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது குற்றவியல் சட்டம் பிரிவு 420-ன் கீழ் (ஏமாற்றுதல்) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், விரைவில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளனர்.

இவ்வாறான போலி ஜோதிடர்கள் மற்றும் பரிகாரம் செய்வதாகக் கூறுபவர்களிடம் பணத்தையோ நகைகளையோ கொடுத்து ஏமாற வேண்டாம் எனக் காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here