ஜாலான் சுல்தான் இஸ்மாயில்-மஜு சந்திப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த விபத்தில் ஈடுபட்ட குடிநுழைவு அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தலைமை இயக்குநர் ஜகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார். காவல்துறை மற்றும் உள்ளக விசாரணைகளின் முடிவு வரும் வரை இந்த இடைநீக்கம் தொடரும் என ஜகாரியா கூறியதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது. நாங்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். மேலும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் பின்பற்றப்படுவது குறித்து உள்ளக விசாரணையையும் மேற்கொண்டு வருகிறோம் என்று அவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 19 அன்று, ஆவணமற்ற குடியேறிகளைத் தடுத்து வைக்கும் ஒரு நடவடிக்கைக்காக சௌ கிட் பகுதிக்கு குடிவரவு லாரி சென்று கொண்டிருந்தபோது, ஜாலான் சுல்தான் இஸ்மாயிலில் உள்ள மஜு சந்திப்பு போக்குவரத்து சிக்னலில் இந்த விபத்து நிகழ்ந்தது. 43 வயதான குடிநுழைவு அதிகாரியால் ஓட்டப்பட்ட அந்த லோரி, போக்குவரத்து சிக்னல் சிவப்பு நிறத்தில் இருந்தபோதிலும், அதன் பீக்கான், சைரனை இயக்கியபடி சந்திப்பிற்குள் நுழைந்தது.
சந்திப்பை நேராகக் கடந்து சென்ற புரோட்டான் சாகா கார், லாரியுடன் மோதியதில், லோரி கட்டுப்பாட்டை இழந்து அந்தக் குடும்பத்தின் மீது மோதியது. 53 வயதான அந்த நபரும், அவரது 25 மற்றும் 12 வயது மகள்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அந்த நபரின் 55 வயதான மனைவி காயமடைந்து, கோலாலம்பூர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அலட்சியமாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் விசாரணைக்கு உதவுவதற்காக, பிளாக் மரியா மற்றும் புரோட்டான் சாகா கார்களின் ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர்.










