நேபாள வெள்ளத்திற்குப் பிறகு 54 மலேசியர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை

 நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து, தொடர்பு கொள்ள முடியாத மலேசியர்களின் எண்ணிக்கை நேற்று 17 என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 54 ஆக உயர்ந்துள்ளது. காத்மாண்டுவில் உள்ள மலேசியத் தூதரகம் நேபாள அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக பிரதமர் அன்வார் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.

தற்போது வரை 54 மலேசியர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து அறிந்து நான் மிகவும் கவலைப்படுகிறேன்,” என்று அவர் கூறினார். மேலும், அவர்களைக் கண்டுபிடிப்பதற்கும், அவர்களின் நிலை குறித்த தகவல்களைப் பெறுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்ட மலேசியர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை உறுதிசெய்ய, புத்ராஜெயா நிலைமையை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து, தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று அன்வர் கூறினார்.

களத்தில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த உதவுவதற்காக, வங்காளதேசம் டாக்காவில் உள்ள மலேசிய உயர் ஆணையத்தின் அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். வெள்ளத்தைத் தொடர்ந்து காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான வெளிநாட்டினரில் 17 மலேசியர்களும் அடங்குவதாக நேபாள சுற்றுலா வாரியம் நேற்று தெரிவித்தது.

புதன்கிழமை காலை வடக்கு ரசுவாவில் உள்ள போதே கோஷி ஆற்றுப் பகுதியில் ஏற்பட்ட பெரும் திடீர் வெள்ளப்பெருக்கு, சந்தைகள், குடியிருப்புகள் மற்றும் உள்கட்டமைப்புகளைச் சேதப்படுத்தியதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்தன. தகவல் தொடர்பு மற்றும் மின்சார வலையமைப்புகளில் ஏற்பட்ட கடுமையான இடையூறுகளே தொடர்பு துண்டிக்கப்பட்டதற்குக் காரணம் என நம்பப்படுவதாக விஸ்மா புத்ரா கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here