வாரணாசியில் வெள்ள பாதிப்பு; மீட்பு, நிவாரண பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு …

புதுடெல்லி, வாரணாசியில் வெள்ள பாதிப்பு; மீட்பு, நிவாரண பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

தொடர் கனமழை காரணமாக உத்தரபிரதேச மாநிலத்தில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகளில் முழங்கால் வரையில் மழைநீர் தேங்கியுள்ளதால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வீடுகளில் வெள்ளநீர் புகுந்ததால், பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

குறிப்பாக, கங்கை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. கங்கையில் வெள்ளம் அபாயக் கட்டத்தை தாண்டி செல்வதால், கரையோர மக்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். மேலும், நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு, தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் வெள்ள பாதிப்பு குறித்து மாவட்ட கலெக்டர் சத்யேந்திர குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசினார். நிவாரண முகாம்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் மற்றும் கங்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறித்து விரிவான விவரங்களைக் கேட்டறிந்தார்.

அப்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தாமதமின்றி அனைத்து அவசர தேவைகளையும், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார்.

மறுபுறம், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பரூக்காபாத் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்ததோடு, பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here