குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 242 பேருடன் மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். விமானம் விழுந்ததில் விடுதி மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள சிலரும் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 270 ஆக உயர்ந்துள்ளது. உடல்கள் அனைத்தும் எரிந்ததால் அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டது. டி.என்.ஏ. பரிசோதனைகள் மேற்கொண்டு உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. இதுவரை 135 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதில் 101 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 101 பேரில் 5 பேர் விமானத்தில் பயணம் செய்யாதவர்கள் ஆவார்கள். விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1.25 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என டாடா குழுமம் அறிவித்துள்ளது.









