ஈரானுடன் ஒப்பந்தம் எட்டப்படும் வரை பொருளாதார தடை தொடரும் – டொனால்டு டிரம்ப்

வாஷிங்டன். மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடிக்கு ஒரு முழுமையான தீர்வைக் காண்பதற்காக, ஈரானுடன் “ஒப்பந்தம் செய்ய அமெரிக்க அவசரப்படாது” என்று அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் மோசமான ஒப்பந்தங்களில் ஒன்று, முன்னாள் ஜனாதிபதி ஒபாமா மற்றும் அவரது நிர்வாகத்தின் அனுபவமற்றவர்களால் உருவாக்கப்பட்டு கையெழுத்திடப்பட்ட ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் தான். அது ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கான ஒரு வழியாக அமைந்தது. ஆனால், தற்போதைய நிர்வாகத்தால் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் ஒப்பந்தம் அதுபோன்றது அல்ல. அப்படியே, அதற்கு நேர் எதிரானது.

தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் மிகவும் ஒழுங்கான முறையில் நடந்து வருகின்றன. காலம் தங்கள் பக்கமே இருப்பதால், இந்த ஒப்பந்தத்தை அவசரகதியில் முடிக்க வேண்டாம் என்று எங்களின் குழுவினருக்கு அறிவுறுத்தி உள்ளேன். இந்த ஒப்பந்தம் இறுதியாகும் வரை ஈரான் மீதான பொருளாதாரத் தடை தொடர்ந்து அமலில் இருக்கும்.

ஈரானுடனான நமது உறவு தற்போது மிகவும் தொழில்முறை சார்ந்ததாகவும், பயனுள்ளதாகவும் மாறி வருகிறது. இருப்பினும், அவர்கள் எந்தவொரு அணு ஆயுதத்தையோ அல்லது அணு குண்டையோ உருவாக்கவோ, வாங்கவோ முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வரலாற்றுச் சிறப்புமிக்க ஆபிரகாம் உடன்பாட்டில் இணைந்ததன் மூலம் தங்களது ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்கிய மத்திய கிழக்கு நாடுகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலத்தில் ஈரான் இஸ்லாமிய குடியரசும் இதில் இணைய விரும்பலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here