‘அட்லீ பற்றி மட்டும் இல்லை, சட்னி குறித்தும் பேசுவேன்..’ – சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ. சிவசங்கர் பேச்சு

சென்னை, தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடைய இன்று காரசார விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தின்போது பேசிய தி.மு.க. உறுப்பினர் சிவசங்கர், “இயக்குனர் அட்லி சிறந்த திரைப்பட காட்சிகளை எடுத்து வெட்டி ஒட்டி ஹிட் கொடுப்பார். அதேபோல எங்கள் ஆட்சியின் சாதனைகளை வைத்துக்கொண்டு தற்போது ஆட்சி நடத்தப்படுகிறது. காலங்களும், காட்சிகளும் மாறும்” என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், “தமிழ் திரையுலகில் இருந்து மக்கள் பணிக்காக அரசியலுக்கு வந்து, த.வெ.க. தலைவர் விஜய் இன்று தமிழகத்தின் முதல்-அமைச்சராகியுள்ளார். ஆனால் முழுநேர அரசியல்வாதியான சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர், சட்டசபையில் இயக்குனர் அட்லீ குறித்தும், எடிட்டிங் குறித்தும் பேசியது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

அட்லீக்கும் சட்டமன்றத்திற்கும் என்ன சம்பந்தம்? காலமும், காட்சியும் ஏற்கனவே மாறிவிட்டது. மாநில உரிமை மற்றும் மொழி உரிமையை என்றும் விட்டுக் கொடுக்க மாட்டோம். தமிழ் எங்கள் பேச்சு, தமிழ் எங்கள் மூச்சு என்பதில் உறுதியாக உள்ளோம்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. சிவசங்கர், “உங்களையும் ‘எக்ஸ்’ தளத்தில் பாலோ செய்கிறேன், இயக்குனர் அட்லீயையும் பாலோ செய்கிறேன். அட்லீ குறித்தும் பேசுவேன், சட்னி குறித்தும் பேசுவேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here