ஜோகூர் சட்டமன்றத் தேர்தல்: வாக்களிக்கத் தொழிலாளர்களுக்கு நேரமளிக்க முதலாளிகளுக்குத் தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்.

கோலாலம்பூர்:

நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள 16-ஆவது ஜோகூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பதிவுசெய்த வாக்காளர்களாக இருக்கும் தொழிலாளர்கள் வாக்களிப்பதற்கு முதலாளிகள் போதுமான நேரத்தை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தின் (EC) செயலாளர் டத்தோ கைருல் ஷஹ்ரில் இட்ருஸ் வலியுறுத்தியுள்ளார்.

தொழிலாளர்கள் வாக்களிப்பதற்குச் சில முதலாளிகள் போதிய நேரமளிக்க மறுப்பதாக எழுந்த புகார்களைத் தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

1954-ஆம் ஆண்டு தேர்தல் குற்றங்கள் சட்டத்தின் 25-ஆவது பிரிவின் கீழ், முதலாளிகள் தங்கள் தொழிலாளர்களின் ஜனநாயகக் கடமையைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், இதற்காகச் சம்பளக் குறைப்போ அல்லது இதர அபராதங்களோ விதிக்கக் கூடாது என்றும் அவர் நினைவுறுத்தினார்.

இந்தச் சட்டத்தை மீறி, தொழிலாளர்கள் வாக்களிப்பதைத் தடுக்கும் முதலாளிகளுக்கு ஐந்து ஆயிரம் ரிங்கிட் வரை அபராதம் அல்லது ஒராண்டு வரை சிறைத்தண்டனை அல்லது இவை இரண்டுமே விதிக்கப்படலாம் என எச்சரித்த அவர், தேர்தல் சுமூகமாக நடைபெற முதலாளிகள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார்.

இம்முறை ஜோகூர் மாநிலத்தின் 56 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 172 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here