பினாங்கு, ஆர்மீனியன் வீதியில் மஸ்ஜித் மலாயு அருகில் உள்ள 100 ஆண்டுகளுக்கு மேலான பழமைவாய்ந்த பாரம்பரியக் கட்டடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததில், இலங்கையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மாநிலத்தில் உள்ள அனைத்துப் பாரம்பரியக் கட்டட உரிமையாளர்களும் தங்களது கட்டடங்களின் பாதுகாப்பை உடனடியாகப் பரிசோதிக்க வேண்டுமென பினாங்கு மாநில அரசு எச்சரிக்கை வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.
நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் இச்சம்பவம் குறித்துத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு அவசர அழைப்பு வந்தது. பாரம்பரியக் கட்டடத்தின் முதல் தளத்தில் இருந்த மர உத்திரங்களும் கற்களும் திடீரென சரிந்து கீழே சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் மீது விழுந்தன. இதில் இலங்கையைச் சேர்ந்த முகமது அம்தார் ( வயது 66), பாத்திமா (வயது 55) ஆகிய தம்பதியர் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தனர்.அவர்களது பிள்ளைகள் சிறு காயங்களுடன் தப்பினர். சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக பினாங்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நடந்த இடத்தைப் பினாங்கு மாநில சுற்றுலா மற்றும் படைப்பாக்கப் பொருளாதாரக் குழுவின் தலைவர் வோங் ஹோன் வாய், உள்ளாட்சி மன்றக் குழுத் தலைவர் எச்’ங் மூய் லாய், பினாங்கு தீவு மாநகராட்சி மேயர் டத்தோ ஏ. ராஜேந்திரன், கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் தே லாய் ஹெங் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
செய்தியாளர்களிடம் பேசிய வோங் ஹோன் வாய் இந்தத் துயரச் சம்பவம், பழைய கட்டடங்களின் கட்டமைப்புகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது. பினாங்கு உலகப் பாரம்பரியக் கழகம் (GTWHI) மற்றும் பினாங்கு தீவு மாநகராட்சி இணைந்து, பாரம்பரியக் கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு உடனடியாகச் கட்டடப் பரிசோதனை மேற்கொள்வதற்கான பொது வழிகாட்டுதலை வழங்கிட அறிவுறுத்தியுள்ளேன்.

இச்சம்பவத்திற்கான உண்மையான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. காயமடைந்த இலங்கைச் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு வழங்கும். இது தொடர்பாக மலேசியாவிலுள்ள இலங்கை தூதரகத்துடன் தொடர்பில் உள்ளோம் என்றார். மேலும், கட்டடங்களைப் பராமரிக்கவும் சீரமைக்கவும் கட்டட உரிமையாளர்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் உதவிகளையும் உலக பாரம்பரிய அமைப்பும், மாநகர் மன்றமும் வழங்கும் என்றும் அவர் கூறினார்.
100 ஆண்டுகளுக்கும் மேலான கட்டடங்களைப் பாரம்பரியக் கட்டடம் (Heritage Building) என அறிவிக்கும் அரசு, அதன் உரிமையாளர்கள் தன்னிச்சையாகச் சீரமைப்புப் பணிகளைச் செய்யப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. எனவே, பொதுமக்களின் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இத்தகைய பழமையான கட்டடங்களின் அமைப்பை அரசே தனது சொந்தச் செலவில் ஆய்வு செய்து சீரமைக்க முன்வர வேண்டும் என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட இலங்கைத் குடும்பத்திற்கு உரிய நிவாரணமும் மருத்துவ உதவிகளும் முழுமையாகக் கிடைக்க மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.









