சென்னை
புரோ கபடி போட்டியில் புனேரி பல்தான் அணி 31-23என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை நேற்று வீழ்த்தியது.நேரு உள்ளரங்கில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு அணி களத்தை தேர்வு செய்ய, புனே வீரர் நிதின் தோமர் முதலில் ரெய்டு சென்றார். அது பலனளிக்கவில்லை. ஆட்டத்தின் முதல் புள்ளியை பெங்களூர் வீரர் ரோகித் குமார் எடுத்தார்.எப்போதும் வேகம் காட்டும் பவன்குமார் முதல் 2 ரெய்டுகளிலும் புனே வீரர்களிடம் பிடிபட்டார். அந்த அளவுக்கு புனே வீரர்களின் கை ஓங்கியது. பவன் தனது முதல் புள்ளியை ஆட்டம் தொடங்கி 11வது நிமிடத்தில் தான் எடுத்தார். முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் 10-10 என்ற கணக்கில் சமநிலை நிலவியது.
2வது பாதியில் புனே கை ஓங்கியது. 7வது நிமிடத்தில் பெங்களூரு அணியை ஆல் அவுட்டாக்கி 19-11 என முன்னிலை பெற்றது.ஆட்டம் முடிய 5 நிமிடங்கள் இருக்கும் போது புனே கேப்டன் சுர்ஜித் சிங் அற்புதமாக லோகேஷ் குமாரை தூக்கி வீசி தனது ஆறாவது புள்ளியை எடுத்தார். இதன்மூலம் புரோ கபடி தொடரில் 250வது புள்ளிகள் எடுத்த தற்காப்பு வீரர்கள் பட்டியலில் அவர் இணைந்தார். அப்போது புனே 24-15 என முன்னிலையில் இருந்தது. ஆட்டநேர முடிவில் புனே அணி 31-23 என்ற புள்ளி கணக்கில பெங்களூரு அணியை வீழ்த்தியது.