இந்தியாவிவசாயிகளுக்கு ரூ.3,000 ரூபாய் பென்சன் வழங்கும் திட்டத்தை ஜார்கண்ட் மாநிலத்தில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

ராஞ்சி: 60 வயதை கடந்த சிறு, குறு விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 பென்சன் வழங்கும் திட்டத்தை ஜார்கண்ட் மாநிலத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பென்சன் வழங்கும் பிரதான் மாதிரி கிஷான் மான்- தன் யோஜனா என்ற திட்டத்தை ராஞ்சியில் பிரதமர் தொடங்கி வைத்தார்.

கிசான் மான்-தன் யோஜனா திட்டம்:

* இந்த திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.36,000 தொகையை மாத தவணைகளாக பிரித்து ஓய்வு ஊதியமாக மாதந்தோறும் ரூ.3000 வழங்கப்படும்.

* 18 முதல் 40 வயதுடைய சிறு, குறு விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்து மாதம் ரூ.55 – ரூ.200 வரை செலுத்தலாம்.

* விவசாயிகள் செலுத்தும் தொகைக்கு சமமான தொகையை மத்திய அரசும் செலுத்தும்.

* விவசாயிகள் 60 வயதை எட்டும் போது அவர்களுக்கான ஓய்வூதியம் கிடைக்கும்.

தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட இந்த பென்சன் திட்டத்தை இன்று பிரதமர் மோடி நிறைவேற்றினார். இந்த திட்டத்தை ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் தொடங்கிவைத்தார். அதன் பின் பேசிய பிரதமர் மோடி, இந்த திட்டத்திற்காக ரூ.10,774 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஜார்கண்ட் மாநிலத்தில் 8 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் எனக் கூறியுள்ளார். இதையடுத்து பேசிய அவர், நாட்டை கொள்ளையடித்தவர்களை கண்டுபிடித்து அவர்களை உரிய இடத்தில் வைப்போம் என தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு 3000 ரூபாய் வழங்கும் மத்திய அரசின் திட்டத்தில் தமிழகத்தில் இருந்து இதுவரை 38,000 பேர் சேர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த திட்டத்தில் 18 வயதுள்ள ஒரு விவசாயி மாதம் 55 ரூபாயும், 40- வயதையடைந்த ஒரு விவசாயி மாதம் 200 ரூபாயும் செலுத்த வேண்டும். விவசாயிகள் அளிக்கும் தொகைக்கு இணையான தொகையை மத்திய அரசும் அளிக்கும். இவ்வாறு பணம் செலுத்தி வந்த விவசாயி 60 வயதை எட்டும் போது அவருக்கு மாதம் தோறும் ரூ.3000 ஓய்வூதியம் வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் தமிழகத்தில் இருந்து இதுவரை 37,904 பேர் இணைந்துள்ளனர். இதில் 24,952 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் அதில், 5,179 பேர் 18 -லிருந்து 25 வயது உடையவர்களாகவும், 11,777 பேர் 26 முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்களாகவும், 7,996 விவசாயிகள் 36  வயது முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்களாகவும் உள்ளனர். மேலும் இதில் 10,979 பெண்களும், 13,973 ஆண்களும் அடங்குவர். மீதமுள்ளவர்களுக்கு விரைவில் அடையாள அட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய விவசாயிகளை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here