கோலாலம்பூர் –
மங்கோலிய அழகி அல்தான்துயா படுகொலை தொடர்பில் முன்னாள் போலீஸ் அதிரடிப் படையைச் சேர்ந்த அஸிலா ஹட்ரி, சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது அவரைப் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது என்றுமே சந்தித்தது இல்லை என்று பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
மங்கோலிய மாடல் அழகி அல்தான்துயாவைப் படுகொலை செய்யும்படி டத்தோஸ்ரீ நஜிப் உத்தரவு பிறப்பித்தார் என்று மரண தண்டனைக் கைதி அஸிலா ஹட்ரி சத்தியப்பிரமாண வாக்குமூலப் பிரகடனம் செய்திருக்கிறார். அந்தப் பிரகடனத்திற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது என்று பிரதமர் அலுவலகத்தின் அறிக்கை மேலும் குறிப்பிட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் அரசாங்கத்தைச் சேர்ந்த மிக மிக முக்கியமான தலைவர் ஒருவர் அஸிலாவைச் சந்தித்தார் என்று நஜிப்பின் வழக்கறிஞர் முகமட் ஷாஃபி கூறினார்,
காஜாங் சிறையிலிருந்து பாதுகாப்பாக வெளியே கொண்டுவரப்பட்ட அஸிலாவை அந்தப் பிரமுகர் சந்தித்தார். அந்தத் தலைவரின் பெயரை இப்போது கூற முடியவில்லை என்றும் ஷாஃபி தெரிவித்தார்.
இந்நிலையில் அஸிலாவைப் பிரதமர் துன் மகாதீர் சந்தித்தார் என்று ஆரூடங்கள் வெளியாகியிருக்கின்றன. அவை உண்மைக்குப் புறம்பானவை என்று நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. அரசாங்கத்தின் தூண்டுதலின் பெயரிலேயே அஸிலா இந்தப் பிரகடனத்தைச் செய்திருக்கிறார் என்பதும் உண்மையல்ல என்று அது கூறியது.
இந்த விஷயத்தில் சட்ட நடைமுறைகள் சம்பந்தப்பட்டிருப்பதால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து அரசாங்கம் சம்பந்தப்பட்ட துறையிடமே விட்டுவிடுவதாக அந்த அறிக்கை தெரிவித்தது.