சென்னை –
தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் திமுக அமோக வெற்றியைப் பதிவுசெய்திருக்கிறது.
இதுவரை வெளியான முடிவுகளின்படி ஆளும் அதிமுகவைவிட திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் பாதிக்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி இருக்கின்றன.
மாவட்டக் கவுன்சிலர் பதவிகளுக்கான போட்டியில் திமுக 248 இடங்களையும் அதிமுக 211 இடங்களையும் காங்கிரஸ் 11 இடங்களையும் பாஜக 6 இடங்களையும் பாட்டாளி மக்கள் கட்சி 12 இடங்களையும் தேமுதிக 4 இடங்களையும் வென்றிருக்கின்றன.
அதேவேளையில் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தலில் திமுக 2,033 இடங்களைக் கைப்பற்றியது. அதிமுக 1,730 இடங்களையும் காங்கிரஸ் 118 இடங்களையும் பாஜக 87 இடங்களையும் பாமக 140 இடங்களையும் தேமுதிக 87 இடங்களையும் கைப்பற்றின.
அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக விளங்கிய கொங்கு மண்டலத்தில் திமுக அதிரடி வெற்றியைப் பெற்றிருக்கிறது. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் அதிமுக மிக மோசமான தோல்வியைத் தழுவியிருக்கிறது.