சிங்கப்பூர் –
புளோக் 534 பெடோக் நோர்த் ஸ்திரீட் எனுமிடத்தில் நேற்றுக் காலை குப்பைத்தொட்டியின் அடியில் சிசு உயிருடன் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
காலை 9 மணியளவில் அங்கு துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் ஒரு பிளாஸ்டிக் பையில் சிசு சுற்றப்பட்டுக் கிடந்ததைக் கண்டனர். அதன் மீது குப்பைப் பைகளும் கிடந்தன.
அந்தப் பையில் ரத்தக்கசிவு இருந்ததையும் புகைப்படங்கள் வழி பார்க்க முடிந்தது. அந்த இடத்திலிருந்து போலீசார் துணியால் சுற்றப்பட்ட நிலையில் ஒரு குழந்தையைத் தூக்கிச் சென்றதைப் பார்த்தேன் என்று லிம் எனும் 72 வயது முதியவர் தெரிவித்தார்.
அந்தக் குழந்தை அழவில்லை. ஆனால், அது உயிருடன் இருந்தது என்றார் அவர்.
அந்தப் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். 12ஆவது மாடியிலிருந்த ஒரு வீட்டில் போலீஸ் அதிகாரி இருந்ததையும் காண முடிந்தது.
2009ஆம் ஆண்டு தொடங்கி 2018ஆம் ஆண்டு வரையில் சிங்கப்பூரில் 16 குழந்தைகள் கைவிடப்பட்டுக் கிடந்தன.