கோலாலம்பூர் –
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு அளித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பி. சுப்பிரமணியம் (வயது 57) செய்துகொண்ட ஜாமீன் கோரும் மனுவை உயர் நீதிமன்றம் நேற்று நிராகரித்தது. நீதிபதி முகமட் ஸைனி மஸ்லான், இந்த மனுவை நிராகரித்தார். சொஸ்மா சட்டத்தின் 13ஆவது பிரிவின் கீழ் ஜாமீன் அனுமதி வழங்கப்படாது என்னும் அடிப்படையில் ஜாமீன் மனு நிராகரிக்கப்படுவதாக நீதிபதி குறிப்பிட்டார்.
சொஸ்மாவின் 13ஆவது பிரிவு, அரசியலமைப்பு சட்டவிதிக்கு முரணானது என்னும் கூற்றை நீதிமன்றம் ஆமோதிக்கவில்லை. ஆகவே, மனுதாரரின் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார் நீதிபதி.
இத்தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்படும் என சுப்பிரமணியத்தின் வழக்கறிஞர் எஸ். செல்வம், நீதிமன்றத்திற்கு வெளியே நிருபர்களிடம் கூறினார்.