நம்பிக்கை கூட்டணி அறிக்கை
கோலாலம்பூர் –
நாடாளுமன்றத்தில் உள்ள 222 எம்பிகளின் பெரும்பான்மை ஆதரவு கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு உள்ளது என்று நம்பிக்கைக் கூட்டணியின் தேசியத் தலைவர் மன்றம் நேற்று கூறியது.
அண்மையில் மாட்சிமை தங்கிய மாமன்னர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு அன்வாருக்குக் கிடைத்திருக்கின்றது என்று நம்பிக்கைக் கூட்டணி தேசியத் தலைவர் மன்றம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
பெரும்பான்மை எம்பிகளின் ஆதரவு தன் பக்கம் இருப்பதை நிரூபிக்க மாமன்னரைச் சந்திப்பதற்கு அன்வாருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கை மேலும் கூறியது.
புதிய பிரதமரை நியமிக்கும் விவகாரத்தில் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஏற்ப மாமன்னர் ஒரு தீர்வைக் காண தொடர்ந்து முயற்சி செய்வார் என்று இஸ்தானா நெகாராவின் அரச உயர் அதிகாரி டத்தோ அகமட் ஃபாடில் சம்சுடின் வெளியிட்டுள்ள அறிக்கையை வரவேற்பதாகவும் நம்பிக்கைக் கூட்டணியின் தேசியத் தலைவர் மன்றம் கூறியது.