மார்ச் 10
மலேசியர்கள் பொறுப்பற்றவர்கள் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் அதிகரித்துவருகின்றன. இது ஆரோக்கியமான செயலாகக் கருதமுடியாது என்கிறது தமிழர் உயர்க்கல்வி மேம்பாட்டு இயக்கம்.
பழைய கார்களைப் பயன்படுத்தும் சாதாரணமக்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். இவர்களின் கார்கள் நெடுஞ்சாலைகளில் பழுதடைந்துவிடுமானால் எங்காவது கைவிட வேண்டியதாகிவிடுகிறது.
கார்களை இழுத்துச்செல்லும் வங்தியில்லாத வாகனங்களை கைவிட்டுச் செல்லும்போது ஒரே வாரத்தில் அக்கார்கள் துகிலுரியப்படுகின்றன.
அதன் பாகங்கள் ஒவ்வொன்றாகக் காணாமல் போய்விடுவது வழக்கமாகி வருகின்றன. இப்படிச்செய்வது அந்நிய நாட்டவர்களல்லர். மலேசியர்களின் குணம் இப்படித்தான் இருக்கிறது.
புது கார்களை வாங்க இயலாதவர்கள் அனுமதிக்கப்பட்ட பழைய கார்களை நம்பித்தான் பயணம் செய்கிறார்கள். பழுதடைந்துவிட்டால் அக்காரை பொறுப்பான கார் இழுவையாளர்களிடம் ஒப்படைக்கவேண்டும். இயலாதவர்கள் ஒதுக்குப்புறமான இடத்தில் நிறுத்தி விட்டுத்தான் செல்வார்கள்.
வழிப்போக்கர்கள் இரவு நேரத்தில் தங்கள் கைவரிசையக் காட்டி பாகங்களை உருவி விடுகின்றனர். இதனால் கார்களுக்குக் கூடுதல் இழப்பு ஏற்பட்டு விடுகிறது.
இப்படி நடந்து விடும்போது காரின் உரிமையாளருக்கு பல மடங்கு செலவு அதிகரித்து விடுகிறது. இவ்விவகாரங்களில் சாலைப்போக்குவரத்துத்துறையின் பங்களிப்பு என்னவாக இருக்கவேண்டும் என கேள்வி எழுப்புகிறார்கள் இவ்வியக்கத்தின் தலைவர் சாலமன் ராஜாவும் உறுப்பினர் வாசுவும்.
நெடுஞ்சாலை டோல் சாவடி அருகிலேயே கார்களின் பாகங்கள் களவாடப்படுகின்றன என்றால் சாலைக் கட்டணப் பகுதிகளில் மறைகாணி (கண்காணிப்பு காமிரா) செயல்படவில்லையா என்ற ஐயமும் எழாமலில்லை. அல்லது தெரிந்தும் தெரியாதுபோல் இருக்கிறார்களா என்றும் சாலமன் கேட்கிறார்.