மதுரையில் சிகிச்சை அளிக்க பணத்திற்காக உடல் உறுப்புகளை விற்க நிர்பந்தப்படுத்துவதாக தனியார் மருத்துவமனை மீது நோயாளியின் மனைவி புகார் அளித்துள்ளார்.
மதுரை திருப்பாலை பகுதியைச் சேர்ந்த வீரபாண்டி என்பவர் தேநீர் கடை வைத்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் திடீரென இவருக்கு மயக்கம் ஏற்பட்டதால் மதுரை கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரூ.5 லட்சம் செலவில் வீரபாண்டியின் உடல்நிலையை சரி செய்துவிடலாம் என மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து 6 மாதம் சிகிச்சை அளித்து வீரபாண்டி குடும்பத்தினரை ரூ.1 கோடி வரை மருத்துவ செலவு செய்ய வைத்துள்ளதாக தெரிகிறது.
தனது சொந்த வீடு மற்றும் சொத்துக்களை விற்பனை செய்து சிகிச்சைக்கான பணத்தை செலுத்தியுள்ளனர் வீரபாண்டியின் குடும்பத்தினர். இந்நிலையில், கடந்த 7ஆம் தேதி வீரபாண்டி முளைச்சாவு அடைந்துவிட்டதாகவும், மருத்துவமனைக்கு கட்ட வேண்டிய மீதித்தொகையை கட்டுமாறும் கூறியிருக்கின்றனர். இந்நிலையில் தனது கணவருக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி ஏமாற்றிவிட்டதாக வீரபாண்டியின் மனைவி நிதியா வேதனையுடன் கூறியுள்ளார்.
வீடு, சொத்து எல்லாம் விற்பனை செய்துவிட்ட நிலையில் பணம் இல்லை என கூறியுள்ளனர். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் வீரபாண்டி மூளைசாவு அடைந்ததால், அவரது இதயம், கிட்னி, கண் ஆகியவற்றை விற்பனை செய்து மருத்துவத்திற்கான பணத்தை எடுத்துக்கொள்வோம் என மிரட்டியதாக நித்யா குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக மதுரை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனுவும் அளித்துள்ளார்.