புதுடெல்லி,மார்ச் 19-
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 160-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது.
இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 8 ஆயிரத்து 970 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 லட்சத்து 19 ஆயிரத்து 367 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நாடு முழுவதும் 166 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை குணப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் மருத்துவத்துறை அறிஞர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக அரசின் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணை மந்திரி அஸ்வினி குமார் சௌபாய் கொரோனா வைரஸ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் பாராளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
”மக்கள் குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது சூரிய வெளிச்சத்தில் நிற்கவேண்டும். சூரிய வெளிச்சம் ‘விட்டமின் டி’ ஊட்டச்சத்தை உருவாக்குகிறது. இந்த விட்டமின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் கொரோனா வைரஸ் உள்ளிட்ட அனைத்து வைரஸ்களையும் கொல்லும் என்றார்.