பெய்ஜிங், ஏப்ரல் 24-
சுமார் 1 கோடி மக்கள் வசிக்கும் சீனாவின் ஹார்பின் நகர் இப்போது கொரோனா பரவலை எதிர்கொண்டு வருகிறது. இதனால் சீனா நிர்வாகம் இந்த நகரை முடக்கியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து திரும்பிய 22 வயது மாணவன் ஒருவனால் சுமார் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, அண்டை நாடான ரஷ்யாவில் இருந்து திரும்பிய நகர மக்களால் ஹார்பின் நகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.சீனாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான ஹார்பின், தற்போது உகான் போன்று முடக்கப்பட்டுள்ளது.
குடிமக்கள் அல்லாத எவரையும் ஹார்பின் நகருக்குள் அனுமதிக்க அதிகாரிகள் மறுத்து வருகின்றனர்.மேலும், வேறு நகரங்களில் பதிவான வாகனங்களையும் ஹார்பின் நகருக்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே, வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஹார்பின் நகருக்குள் திரும்பிய மக்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கி வருகின்றனர்.
உகான் போன்று கடுமையான நெறிமுறைகளை ஹார்பின் நகரிலும் சீனா அமுலுக்கு கொண்டு வந்துள்ளது.வெளிநாட்டில் இருந்து ஹார்பின் நகருக்கு திரும்பும் அனைவரும் 28 நாட்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளனர்.மட்டுமின்றி மூன்று விதமான சோதனைகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.