கிள்ளான்,மே-8 : கோவிட்-19 தாக்கத்தினால் அதிகமான மலேசியர்கள் தங்கள் வேலை வாய்ப்பினை இழக்கக்கூடும் என்ற தகவல் நம்மை அதிர்ச்சியளிக்க செய்திருக்கிறது என்று மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத் (பிரிமாஸ்) தலைவர் முத்துசாமி திருமேனி தெரிவித்தார்.
உலகமே பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் வேளையில் நம் நாடும் அதற்கு விதிவிலக்கல்ல. உள்ளூர்வாசிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்க நாங்கள் என்றும் தயாராக இருக்கின்றோம். ஆனால் உணவகங்களில் வேலை செய்வதை சிலர் சமூக அந்தஸ்து இல்லாததுபோல் நினைக்கின்றனர் என்பது வேதனையளிக்கும் விஷயமாக இருக்கிறது. இளைஞர்களுக்கு ஒரு கருத்தினை இவ்வேளையில் பகிர விரும்புகிறேன். உணவகத்தில் வேலை என்பது உங்களுக்கு சம்பளத்துடன் கூடிய பயிற்சி களம் என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும்.
காலத்திற்கேற்ப உணவகங்களின் அமைப்பு மாறுப்படுமே தவிர உணவின் தேவை என்பது உலகம் உள்ளவரை இருக்கும். சில காலம் உணவகத்தில் பணியாற்றி அனுபவம் பெற்றபின் சொந்தமாக வியாபாரம் தொடங்குவதற்கான பிரகாசமான வாய்ப்புகள் இருக்கின்றன என்றார்.
நாங்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகிறோம். அதே வேளை அரசாங்கத்தின் தற்போதைய பொருளாதார சுழலை அறிந்து அரசாங்கத்திடம் சில கோரிக்கைகளை முன்வைக்கிறோம். தொழிலாளர்கள் லெவி, உடனடி மாற்றுத் தொழிலாளியை வழங்குதல் ஆகியவையாகும். மற்றொரு கோரிக்கை சொக்சோவில் பதிந்திருக்கும் அந்நியத் தொழிலாளருக்கும் உதவித் தொகை வழங்க மனிதவள அமைச்சர் ஆவன செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் முத்துசாமி திருமேனி முன்வைத்துள்ளார்.