எக்காரணம் கொண்டும் பொதுப் போக்குவரத்துக்கான பெருந்து கட்டணம் உயர்த்தப்படக்கூடாது என்பதில் அரசாங்கம் மிகவும் கண்டிப்பாய் இருக்கிறது. இதைத்தான் நாட்டின் முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியிருக்கிறார்.
கொரோனா தொற்றில் மிக அவசியமானது சமூக இடைவெளி. இதில் அரசு மிகத் தெளிவாய் இருக்கிறது. அப்படியானால் பேருந்து இருக்கைகளில் பாதி காலியாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது. இதைக் கடைப்பிடிக்கும் போது, பொது பேருந்துகள் பழைய கட்டணத்தையே பின்பற்ற வேண்டும். இதில் நாற்பது பேருக்கான இருக்கையில் வெறும் இருபது பேருக்கான கட்டணம் போதுமானதாக இருக்குமா? என்ற கேள்விக்கு என்ன பதில் வரும்?
இதற்கு அரசு கூறும் காரணமென்ன?
எரிபொருள் விலை மிகக் குறைந்திருக்கிறது என்பதுதான். எரிபொருள் விலை குறைந்திருப்பதால் பயணிகள் கட்டணம் விலையேற்றம் அவசியமில்லை என்கிறார் அவர்.
முன்பெல்லாம் எரிபொருள் விலையைக் காட்டித்தான் கட்டணத்தைக் கூட்டினார்கள். இப்போது எரிபொருள் தாழ்ந்திருக்கிறது, இப்போது விலையைக் குறைப்பதுதானே நியாயம். கட்டணம் பழையபடியே இருக்கிறது. பயணிகள் மட்டுமே குறைக்கப்பட்டிருக்கின்றனர்.
இது இருதரப்பின் நியாயமாக இருப்பதால் வாததிற்கு இடமில்லை. கொரோனா காலத்தில் சிலவற்றை அனுசரணையோடுதான் அணுக பார்க்கவேண்டும்.